பொதுசிவில் சட்டம் அமலாவது உறுதி: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா
டெல்லி: பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் சுக்லா, பொதுசிவில் சட்டம் தொடர்பான பிரச்னையை எழுப்பினார். அதற்கு பதில் அளித்து அமைச்சர் சதானந்த கவுடா கூறியதாவது:

இந்திய அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த வகை செய்கிறது. உச்ச நீதிமன்றமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளது.
சமுதாயத்தில் பெண்களின் அந்தஸ்து உயர இந்த சட்டம் உதவியாக இருக்கும். திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை போன்ற அம்சங்களை உள்ளடக்கிய பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. நாகரீக சமுதாயத்தில் பல்வேறு தரப்பினரின் மதநம்பிக்கை, பழக்க வழக்கங்கள், தனிநபர் சட்டங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட இந்த பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தும் முன்பு அதுபற்றி விரிவான அளவில் ஆலோசனை நடத்த அரசு திட்டமிட்டு உள்ளது. விரைவில் இந்த ஆலோசனை தொடங்கும்.
கோவா மாநிலத்தில் பொது சிவில் சட்டமானது குடும்ப சட்டம் என்ற பெயரில் ஏற்கனவே பின்பற்றப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள அனைவராலும் இந்த சட்டம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் விருப்பமாக உள்ளது.
அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு மதநம்பிக்கை, மத பிரசாரம், சுதந்திரமாக தொழில் செய்தல் ஆகியவற்றை உறுதி செய்வதாகவும், எனவேதான் இது ஒரு முக்கியமான பிரச்னை என்றும், அரசியல் சாசனத்தின் இந்த பிரிவுடன் முரண்படாத வகையில் பொதுசிவில் சட்டத்தின் அம்சங்களை நாம் வகுக்க வேண்டும்.
இவ்வாறு சதானந்த கவுடா கூறினார்.












Click it and Unblock the Notifications