மத்திய அரசு அனுமதி இன்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது: மத்திய அமைச்சர் ஜவடேகர் அதிரடி!!
டெல்லி: மத்திய அரசின் அனுமதியில்லாமல் கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது மற்றும் ராசிமணல் ஆகிய இடங்களில் அணை கட்டியே தீருவோம் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது கர்நாடகா. இதற்காக ரூ25 கோடி நிதியையும் பட்ஜெட்டில் அம்மாநிலம் ஒதுக்கியுள்ளது.
கர்நாடகாவுக்கு ஒட்டுமொத்த தமிழகமே எதிர்ப்பு தெரிவிக்கிறது. தமிழக சட்டசபையில் இதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 28-ந் தேதி தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தும் நடத்தப்பட்டது. ஆனால் தமிழகத்தின் எதிர்ப்பை மீறி அணை கட்டுவோம் என கர்நாடகா கூறுகிறது.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட அனுமதி கோரவில்லை.
மத்திய அரசின் அனுமதி இன்றி கர்நாடகா மாநில அரசால் காவிரியின் குறுக்கே புதிய அணை எதுவும் கட்ட முடியாது என்று கூறியுள்ளார்.