தெலுங்கானா எம்.எல்.ஏவின் இந்திய குடியுரிமை அதிரடி ரத்து!
ஜெர்மன் குடியுரிமை பெற்றுள்ள தெலுங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமையை ரத்து செய்துள்ளது மத்திய அரசு
டெல்லி: ஜெர்மன் நாட்டு குடியுரிமை பெற்றிருக்கும் தெலுங்கானா டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ. ரமேஷின் இந்திய குடியுரிமையை மத்திய அரசு பறித்துள்ளது.
தெலுங்கானாவின் வெமுலவாடா தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ். தெலுங்குதேசம் கட்சியில் இருந்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு தாவியவர்.

2010-ம் ஆண்டு வெமுலவாடா இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ். வேட்பாளராக போட்டியிட்டு ரமேஷ் வென்றார். இவரது வெற்றியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ஆதிநிவாஸ் வழக்கு தொடர்ந்தார்.
ஜெர்மன் குடியுரிமை பெற்றவர் ரமேஷ்; போலி ஆவணங்கள் மூலம் இந்திய குடியுரிமை பெற்றிருக்கிறார் என ஆதிநிவாஸ் வழக்கில் தெரிவித்திருந்தார். இதை விசாரித்த ஆந்திரா உயர்நீதிமன்றம் ரமேஷ் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது.
ஆனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ரமேஷ், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை வாங்கினார். இத்தடைக்கு எதிராக ஆதிநிவாஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ஜெர்மன் குடியுரிமை பெற்ற ரமேஷ் போலி ஆவணங்கள் மூலமே இந்திய குடியுரிமை பெற்றிருக்கிறார். ஆகையால் அவரது இந்திய குடியுரிமை ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ரமேஷ் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications