ஏனுங்க.. இந்த காவிரி மேலாண்மை வாரியத்துக்கு வெச்ச கெடு என்னாச்சுங்க?
டெல்லி: காவிரி நதிநீரை திறக்காத கர்நாடகாவை காய்ச்சிய உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து எதுவுமே பேசாதது தமிழக விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காவிரி நதிநீர் பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று வாரியம் அமைப்பதுதான் தீர்வு என்பது பொதுவான கருத்து. மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் கர்நாடகா அணைகளின் கட்டுப்பாடு அதன் கீழ் சென்றுவிடும்.
நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கான நீரும் கிடைக்கும். ஆகையால்தான் உச்சநீதிமன்றமும் மத்திய அரசுக்கு 4 வார கெடுவிதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இன்று காவிரி வழக்கு விசாரணையின் போது கர்நாடகாவை வெளுத்து வாங்கியது உச்சநீதிமன்றம். ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டு ஒரு வாரமாகிவிட்டதே என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? அதை விரைவாக அமைத்தால் தீர்வு காணலாம் என சொல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என உத்தரவிட்டிருக்கிறது.
கர்நாடகாவுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்குமா? மத்திய அரசுக்கு கொடுத்த கெடுவை உச்சநீதிமன்றம் எத்தனை ஆண்டுகாலத்துக்கு நீடிக்குமோ? என்பதுதான் தமிழக விவசாயிகள் கேள்வியாக உருவெடுத்துள்ளது.