சந்திரபாபு நாயுடு கைதால் கொந்தளிப்பு.. பந்திற்கு அழைப்பு.. ஆந்திர - தமிழக எல்லையில் ஹை டென்ஷன்
அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் நாளை முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், ஆந்திராவில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. போலீசாரும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். ஆந்திர முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆளும் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பஸ் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று கர்னூல் மாவட்டத்திலுள்ள நந்தியாலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து பேருந்திற்கு தூங்க சென்றார்.

அப்போது அதிகாலை திடீரென வந்த 600 க்கும் மேற்பட்ட போலீசார் தெலுங்கு தேசம் கட்சியினரை அங்கிருந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டனர். இதற்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சந்திரபாபு நாயுடு உறங்கி கொண்டு இருந்த பஸ்சின் கண்ணாடியை தட்டினர். சந்திர பாபு நாயுடு போலீசாரிடம் என்ன விவகாரம் என்று கேட்ட போது, ஊழல் வழக்கில் கைது செய்ய வந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதாவது, சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேச முதல்வராக கடந்த 2014 ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்த போது மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் விசாரணை நடந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். நேற்று காலை 6 மணிக்கு கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை தங்களது அலுவலகத்தில் வைத்து சிஐடி அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
விடிய விடிய நடைபெற்ற விசாரணை இன்று அதிகாலை 3.15 மணி வரை நீடித்தது. பின்னர் கஞ்சனப்பள்ளியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் இருந்து விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு சந்திரபாபு நாயுடு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு, நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது வரும் 22 ஆம் தேதி அவருக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து சந்திரபாபு நாயுடு, ராஜ முந்திரி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த உத்தரவு வெளியான சில நிமிடங்களிலேயே சந்திர பாபு தரப்பில் இரண்டு ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உடல் நிலையை காரணம் காட்டி ஒரு மனுவும் வீட்டிலேயே இருப்பதாக ஒரு மனுவும் என இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆந்திர மாநிலத்தில் நாளை முழு அடைப்பிற்கு தெலுங்கு தேசம் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனிடையே, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதுவும் அசம்பாவிதங்கள் நடந்து விடாமல் தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சந்திரபாபு நாயுடு கைதால் ஆந்திராவில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications