எந்த ஊழலையும் செய்யவில்லை! பதற்றம் வேண்டாம்! தெலுங்கு தேசம் கட்சியினருக்கு சந்திரபாபு நாயுடு அறிவுரை
அமராவதி: என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் நான் எந்த முறைகேட்டையும் ஊழலையும் செய்யவில்லை. குற்றப்பிரிவு புலனாய்வு துறை போலீஸார் முறையான தகவல்களை தெரிவிக்கவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என கேட்டேன்.

அதை காண்பிக்கவும் போலீஸார் மறுத்துவிட்டார்கள். நான் சம்பந்தப்படாமலேயே என் பெயரை முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துவிட்டனர். என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். வழக்கை திசை திருப்புகிறார்கள். நான் எந்த ஊழலையும் செய்யவில்லை.
சட்டபடி வழக்கு விசாரணையை சந்திப்பேன். புகாரில் உண்மையில்லை என்பதால் கட்சியினர் யாரும் பதற்றப்பட வேண்டாம். அமைதி காக்குமாறும் சந்திரபாபு நாயுடு தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்த போது ஆந்திரா திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ 317 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையிலான சட்டப்பிரிவுகளின் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 120B (கிரிமினல் சதி), 420 (மோசடி) மற்றும் 465 (போலி ஆவணம் தயாரித்தல்) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் விசாரணை நடந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர். நந்தியா் பகுதியில் டிஐஜி தலைமையில் அதிக அளவிலான போலீஸார் இன்று அதிகாலை சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர்.
ஆனால் சந்திரபாபு வீட்டின் முன் கூடியிருந்த கட்சியினர் போலீஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அது போல் சந்திரபாபு நாயுடு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவின் பாதுகாப்பில் இருக்கிறதால் அவரை அதிகாலை 5.30 மணி வரை கைது செய்து அழைத்துச் செல்ல முடியாது என எஸ்பிஜி படையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு காத்திருந்த போலீஸார் சந்திரபாபு நாயுடுவை காலை 6 மணிக்கு கைது செய்தனர். அவர் விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அதிகமாக இருந்ததால் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. சந்திரபாபு நாயுடுவின் கைது எதிரொலியாக தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திராவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழக ஆந்திரா எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் ஆந்திராவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications