சட்டிஸ்கர் முதற்கட்ட சட்டமன்ற தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவடைந்தது.. 58% வாக்குகள் பதிவு!
சட்டிஸ்கரில் இன்று முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
Recommended Video
ராய்பூர்: சட்டிஸ்கரில் இன்று முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
இந்திய அரசியலில் அடுத்த 50 நாட்கள் கட்சிகளுக்கு மிக முக்கியமான நாட்கள் ஆகும். 5 மாநிலங்களில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தல் 2019 நாடாளுமன்ற தேர்தலின் செமி பைனலாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சட்டிஸ்கரில் இன்று முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் நடந்தது. அங்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. ராமன் சிங் தலைமையிலான 15 வருட பாஜக ஆட்சியை அங்கு முறியடிக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. முன்னாள் பாஜக தலைவரான கருணா சுக்லாதான் தற்போது அங்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய வேட்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 90
சட்டிஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளது. அதில் 18 தொகுதிகளுக்கு இன்றும், வரும் 20 தேதி 72 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 11ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். இன்று தேர்தல் நடந்த 18 தொகுதிகளும் நக்சல் தாக்குதல் நிறைந்த தொகுதிகள் ஆகும்.
நக்சல் தாக்குதல்
மொத்தம் 8 மாவட்டங்களில் இந்த 18 தொகுதிகள் உள்ளது. இதில் 7 மாவட்டங்கள் அதிக அளவில் நக்சல் தாக்க கூடிய ஆபத்து உள்ள இடங்கள் என்பதால் பாதுகாப்பு அதிகமாக அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நான்கு முறை நக்சல்கள் வெவ்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் அனைத்தையும் பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.
என்ன வசதி
சில மோசமான இடங்களில் வாக்களிக்க வசதியாக 12 ஹெலிகாப்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இது இல்லாமல் படகுகள், பாதுகாப்பு வாகனங்களும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு மொத்தம் 16,21,839 ஆண் வாக்காளர்களும், 15,57,592 பெண் வாக்காளர்களும், 89 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர். ஆனால் இதில் பலர் வாக்களிக்க வரவில்லை. நக்சல் அச்சுறுத்தல் காரணமாக பலர் வாக்களிக்க வரவில்லை.
முடிந்தது
10 தொகுதிகளில் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது, இங்கு 3 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. 8 தொகுதிகளில் 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது, இங்கு 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. 18 தொகுதிகளில் மொத்தம் 58.18 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. நக்சலின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்த போதும் கூட சதவிகிதம் வெகுவாக குறைந்துள்ளது. சட்டிஸ்கரில் மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு 2ம் கட்டமாக நவம்பர் 20ம் தேதி தேர்தல் நடக்கும்.