சத்தீஸ்கர்: தேர்தலை வெற்றிகரமாக நடத்தின கோபம்.. 14 கட்டுமான பணி வாகனங்களுக்கு தீ வைத்த 'மாவோ'ஸ்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் எதிர்ப்பு, அழைப்பு அனைத்தையும் நிராகரித்து வெற்றிகரமாக சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. மாவோயிஸ்டுகளுக்கு மிகப் பெரும் பின்னடைவை சட்டசபை தேர்தல் ஏற்படுத்திவிட்டதால் ஆத்திரத்தில் 14 கட்டுமான பணி வாகனங்களுக்கு தீ வைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 7, நவம்பர் 17 என இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. முதல் கட்டமாக மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டு பகுதிகளில் 20 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கு மாவோயிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி மக்களை வாக்களிக்க கூடாது என எச்சரித்திருந்தனர். மேலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் தாக்குதல்களையும் மாவோயிஸ்டுகள் நடத்தினர். ஆனாலும் வெற்றிகரமாக சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அதேபோல எஞ்சிய தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தலும் நவம்பர் 17-ல் நடத்தப்பட்டுவிட்டது. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் மாவோயிச்டுகள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் தண்டேவடா பகுதியில் சாலை உள்ளிட்ட கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த வாகனங்களை தீக்கிரையாக்கி உள்ளனர். தண்டேவடா பகுதியில் 50க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டு கும்பல், பொதுமக்களைப் போல நடமாடியபடியே ஜேசிபி, கிரேன் உள்ளிட்ட 14 வாகனங்களுக்கு தீ வைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. டிசம்பர் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நாளிலும் மாவோயிஸ்டுகள் இதேபோல அட்டூழியங்களை நிகழ்த்தக் கூடும் என்பதால் அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீண்டும் வெல்லும் என்பது பொதுவான தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள். அதேநேரத்தில் கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களை பாஜக பெறக் கூடும் எனவும் தேர்தல் கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications