மிசோரம், சத்தீஸ்கர் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் மாலை 5 மணியுடன் நிறைவு! மாவோயிஸ்டுகள் தாக்குதல்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை மறுநாள் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்திலும் நவம்பர் 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதில் 12 மாவட்டங்கள், மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள பஸ்தார் பிராந்தியத்தில் உள்ளன. இந்த பகுதியில் மொத்தம் 2900 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 650 வாக்கு சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு விடுதலைக்குப் பின்னர் பழங்குடி மக்கள் முதல் முறையாக வாக்களிக்கும் வகையில் 126 கிராமங்களில் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவோயிஸ்டுகள் பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டன.
மிசோரம்: மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 1276 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 765 வாக்கு சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப் பதிவு கண்காணிக்கப்படுகிறது.
இன்றுடன் பிரசாரம் ஓய்வு: நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறும் சத்தீஸ்கர், மிசோரமில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. மேலும் இன்று மாலைக்குப் பிறகு நவம்பர் 30-ந் தேதி வரை எந்த கருத்து கணிப்பு முடிவுகளும் வெளியிடக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது.
மாவோயிஸ்டுகள் தாக்குதல்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள், சட்டசபை தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்திருந்தனர். தற்போது நடைபெறும் தேர்தல் போலியானது என்றும் மக்கள் யுத்தம் மூலமே அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதால் பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் எனவும் மாவோயிஸ்டுகள் சுவரொட்டிகள் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் மாவோயிஸ்டுகளால் பாஜக நிர்வாகி உள்ளிட்ட 2 பேர் கடந்த சில நாட்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் நடைபெற உள்ள சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதலையும் இன்று நடத்தினர். இதனைத் தொடர்ந்து முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் சத்தீஸ்கர் தொகுதிகளில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications