சோட்டா ராஜன் கைதானது உண்மைதான்.. அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கிவிட்டோம்: ராஜ்நாத்சிங்
டெல்லி: சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டது தொடர்பாக இந்தோனேஷியா மற்றும் இன்டர்போல் அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நன்றி தெரிவித்தார்.
இந்தியாவால் 2 தசாப்தங்களாக தேடப்பட்டுவரும், நிழலுலக தாதா, சோட்டா ராஜன், இந்தோனேஷியாவின் பாலி தீவில், இன்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலியா கொடுத்த தகவலின்பேரில், இந்தோனேஷியா அரசின் ஒத்துழைப்பால், இன்டர்போல் போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த தகவல் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கவனத்திற்கு வந்ததும், அவர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து, நடந்த சம்பவங்களை விவரித்தார்.
இதன்பின் நிருபர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங் "ஆம்.. சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டது உண்மைதான். இதற்காக இந்தோனேஷியா அரசு மற்றும் இன்டர்போலுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சோட்டா ராஜனை அடையாளம் காணுதல் மற்றும் அவரிம் மேற்கொள்ள வேண்டிய விசாரணை குறித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள தொடங்கிவிட்டது. இந்தியாவின் வேண்டுகோளின்பேரில்தான் இன்டர்போல் இந்த நடவடிக்கையை எடுத்தது" என்றார்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு கூறுகையில், இன்டர்போல் விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு சிபிஐயிடம் தரப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்திலும் சிபிஐதான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும். இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா அரசுகள் ஒத்துழைப்போடுதான் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.












Click it and Unblock the Notifications