ராஜ்யசபா தேர்தலில் 'தமிழரான' ப.சிதம்பரத்தை நிறுத்த கர்நாடகா காங். எதிர்ப்பு!
பெங்களூர்: ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கர்நாடகத்திலிருந்து போட்டியிட அந்தக் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, பி.கே.ஹரிபிரசாத், பாஜகவின் பிரபாகர்கோரே, எம்.ரமாஜாய்ஸ் ஆகியோரது பதவிக் காலம் ஜூன் 24-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அந்த இடங்களுக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக ஜூன் 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் 122 உறுப்பினர்கள் ஆதரவுடன் 3 வேட்பாளர்களும், இதர கட்சிகளின் ஆதரவுடன் 4-ஆவது வேட்பாளரையும் நிறுத்த காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது.
இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு வாய்ப்பளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பி.கே.சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதனிடையே, கட்சியின் மேலிட முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.என்.ராஜண்ணா கூறியது:
காவிரி, ஒகேனக்கல் விவகாரங்களில் கர்நாடகத்திற்கு எதிராகவும், தமிழகத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்ட ப.சிதம்பரத்தை ராஜ்யசபாவுக்கு கர்நாடகத்தில் இருந்து தேர்வு செய்ய அனுமதிக்கமாட்டோம்.
கட்சித் தொண்டர்களின் கருத்துக்கு மாறாக நிறுத்தப்பட்டால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சிதம்பரத்திற்கு எதிராக வாக்களிப்போம். கட்சித் தொண்டர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்காததால்தான் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. கட்சி மேலிடத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்க நாங்கள் ஒன்றும் அடிமைகள் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications