கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாகிறார் சிதம்பரம்? சித்தராமையா மீண்டும் எதிர்ப்பு
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ராஜ்யசபா எம்.பி.யாக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை கர்நாடகா எம்.பியாக்க முடியாது என முதல்வர் சித்தராமையா போர்க்கொடி தூக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
2010-ல் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவைச் சேர்ந்த வெங்கையா நாயுடு, ஆயனூர் மஞ்சுநாத், காங்கிரஸை சேர்ந்த ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் முடிகிறது. சுயேட்சை எம்.பி. விஜய் மல்லையாவும் தற்போது ராஜினாமா செய்துள்ளார். இந்த 4 இடங்களுக்கான தேர்தல் இம்மாதம் நடைபெற உள்ளது.

கர்நாடக சட்டசபையில் தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் காங்கிரஸ் 2 எம்.பி.க்களையும் பாஜக எம்.பி.யையும் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்ய முடியும். மற்றொரு உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கு காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் போதிய உறுப்பினர்கள் இல்லை. இதனால் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவைப் பெற காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் மும்முரம் காட்டுகின்றன.
காங்கிரஸின் ஆஸ்கர் பெர்னாண்டஸ், பாஜகவின் வெங்கையா நாயுடு ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் சார்பில் 2-வது உறுப்பினராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தேர்வு செய்ய காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவரை கர்நாடகா சார்பில் தேர்ந்தெடுக்கக் கூடாது எனக் கூறி முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக சிதம்பரத்தை தேர்வு செய்ய சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதனிடையே காங்கிரஸ், மஜத கூட்டணியுடன் எஞ்சிய 3-வது உறுப்பினர் இடத்தை பிடிக்க முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications