இந்தியா - சீனா மோதல்.. மேலும் 4 இந்திய ராணுவ வீரர்கள் கவலைக்கிடம்.. தீவிர சிகிச்சை.. என்ன நடக்கிறது?
லடாக்: இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் நேற்று மற்றும் நேற்று முதல் நாள் நடந்த சண்டையில் மேலும் 4 இந்திய வீரர்களின் உடல் கவலைக்கிடமாக உள்ளது.
இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் பிரச்சனை நிலவி வருகிறது. லடாக்கில் கடந்த மே 5ம் தேதி சீனா அத்துமீறியது. அப்போது தொடங்கிய பிரச்சனை இன்னும் முடியவில்லை. கடந்த வாரம் இது தொடர்பாக ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின் கல்வான் பகுதியில் சீனா தனது படைகளை வாபஸ் வாங்கியது. இன்னும் பாங்காங் திசோ பகுதியில் சீனா படைகளை வாபஸ் வாங்கவில்லை. இந்த நிலையில் கல்வான் பகுதியில் நேற்று கொடூரமான சண்டை நடந்தது.
இந்தியா வேண்டுமென்றே சீண்டுகிறது.. கால்வன் பள்ளத்தாக்கு எங்களுடையது.. உண்மைக்கு புறம்பாக பேசும் சீனா
கொடூரமான சண்டை
கல்வான் பகுதியில் இருக்கும் 14வது கட்டுப்பாட்டு பகுதியில் சண்டை நடந்தது. இந்த பகுதி கல்வான் நதியின் வாய் பகுதி ஆகும். இது இந்தியாவிற்கு கீழ் வரும் பகுதி ஆகும். இங்கு சீனா அத்துமீறி நுழைந்து இருந்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சென்ற போது அது சண்டையில் முடிந்தது. இந்த சண்டை மொத்தமும் 8 மணி நேரம் நேற்று முதல் நாளில் இருந்து நேற்று அதிகாலை வரை நடந்தது.
வீர மரணம்
லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டை இந்தியா - சீனா ஆகிய இரண்டு நாடுகளையும் உலுக்கி உள்ளது. நேற்று முதல் நாள் இரவு லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. சீன தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வருகிறது.
படுகாயம்
இந்த தாக்குதலில் சம்பவ இடத்தில் 3 இந்திய ராணுவ வீரர்கள் பலியானார்கள். மீதம் 17 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்து, குளிரில் கஷ்டப்பட்டதில் பலியாகி உள்ளனர். அங்கு நிலவிய மோசமான குளிர்தான் இந்த மரணத்திற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. 100+ வீரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் நேற்று மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிருக்கு போராட்டம்
இன்னும் 4 பேர் உயிருக்கு போராடி வருகிறார்கள். இந்திய ராணுவத்தின் 14வது படை பிரிவை சேர்ந்த வீரர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடலில் இவர்களுக்கு மிக மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த காயங்கள் காரணமாக தற்போது இவர்கள் உயிருக்கு போராடி வருகிறார்கள். தற்போது இவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.