தொடரும் மர்மம்.. லடாக் சண்டையில் எத்தனை சீன வீரர்கள் பலியானார்கள்? மௌனம் சாதிக்கும் சீனாவின் பிஎல்ஏ!
லடாக்: லடாக்கில் கல்வான் பகுதியில் நேற்று முதல்நாள் இரவு நடந்த சண்டையில் சீனாவின் வீரர்கள் எத்தனை பேர் உண்மையில் பலியானார்கள் என்பதில் நிறைய குழப்பங்கள் சந்தேகங்கள் எழுந்துள்ளது.
Recommended Video
லடாக் எல்லையில் இந்தியா சீனா இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் இது போராக வெடிக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவும் தீவிரமாக தயாராகி வருகிறது.
நேற்று முதல் நாள் இரவு லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

பலி எண்ணிக்கை
இந்த நிலையில் இதில் சீனாவின் பலி எண்ணிக்கை குறித்து நிறைய குழப்பங்கள் சந்தேகங்கள் எழுந்துள்ளது. முதலில் சீனாவின் பலி எண்ணிக்கை எத்தனை என்று இந்திய ராணுவம் வெளிப்படையாக எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. சீனாவின் தரப்பிலும் பலி எண்ணிக்கை உள்ளது. இரண்டு தரப்பிலும் காயங்கள், பலி உள்ளது என்றுதான் இந்திய ராணுவம் கடைசியாக தெரிவித்து இருந்தது. அதன்பின் அதில் வேறு விதமான அப்டேட் எதுவும் வரவில்லை.

ஊடக தகவல்கள்
அதன்பின் ஏஎன்ஐ உள்ளிட்ட தேசிய ஊடகங்கள் இது தொடர்பான விவரங்களை வெளியிட்டது. நேற்று மதியம் சீனாவின் தரப்பில் 20 பேர் பலியானதாக தகவல்கள் வந்தது. அதை தொடர்ந்து சீனாவின் தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வந்தது. ராணுவ தரப்பில் சிலர் இந்த விவரங்களை வெளியிட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தேசிய ஊடகங்களில் வெளியானது.

ஆனால் சீனா
ஆனால் உண்மையில் சீனாவின் தரப்பில் எத்தனை பேர் பலியானார்கள் என்பது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. சீனா இது தொடர்பாக இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. எங்கள் பக்கம் இத்தனை பேர் காயம் அடைந்துள்ளனர். இத்தனை பேரை இழந்து இருக்கிறோம் என்று சீனா எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. சீனா தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது.

நேற்றில் இருந்தே
நேற்று முதல் நாள் இரவில் இருந்து நேற்று அதிகாலை வரை சண்டை நடந்து இருக்கிறது. ஆனாலும் இந்திய ராணுவ தரப்பு தனது பலி எண்ணிக்கை குறித்து வாய் திறக்கும் வரை சீனா எதுவும் பேசவில்லை. சீனாவின் அரசுக்கு கட்டுப்பட்டு இயங்கும் குளோபல் டைம்ஸ் ஊடகம், சீனாவில் 20 ராணுவ வீரர்கள் பலியாகிவிட்டதாக கூறிவிட்டு, பின் அதையும் கூட மறுத்துவிட்டது.

நிறைய சந்தேகம்
நேற்று லடாக் எல்லையில் சண்டைக்கு பின் கல்வான் பகுதிக்கு சீனாவின் ஹெலிகாப்டர்கள் வந்து உள்ளது. அங்கு கொல்லப்பட்ட சீன வீரர்களின் உடல்களை எடுத்து செல்ல சீன ராணுவம் வந்து சென்றுள்ளது. இதனால் கண்டிப்பாக சீன ராணுவம் தரப்பில் அதிக பலி எண்ணிக்கை இருக்கும் என்கிறார்கள். ஆனால் இது குறித்து சீனா சாதிக்கும் கள்ள மௌனம்தான் அதிக சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications