மொத்தமாக வேண்டும்.. யார் கைப்பற்றுவது.. பாங்காங் திசோவில் சீனாவின் "பிஎல்ஏ" அத்துமீறல்.. பின்னணி!
லடாக்: லடாக் அருகே இருக்கும் பாங்காங் திசோ பகுதியில் சீன ராணுவம் பின்வாங்காமல் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. அங்கு படைகளை திரும்ப பெற சீனாவின் பிஎல்ஏ ராணுவம் மறுத்து வருகிறது.
லடாக் பிரச்சனை குறித்து கடந்த சனிக்கிழமை இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்த பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதில் எல்லையில் தொடர் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டது.

பேசியது என்ன
இந்த பேச்சுவார்த்தையில், லடாக் பகுதியில் இரண்டு நாடுகளும் படைகளை திரும்ப பெற வேண்டும். மே மாதத்திற்கு முன் நிலைமை எப்படி இருந்ததோ அதே நிலைமைக்கு செல்ல வேண்டும். மே 5ம் தேதிதான் பாங்காங் திசோ பகுதியில் சீனா முதலில் அத்துமீறியது. அங்கிருந்து படைகளை சீனா திரும்ப பெற வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் இந்தியா கோரிக்கை வைத்தது.

செய்தது
இந்த நிலையில் பாங்காங் திசோ அருகே இருக்கும் கல்வான் பகுதியில் இருந்து சீனா கொஞ்சம் படைகளை திரும்ப பெற்று உள்ளது. ஆனால் முழுவதுமாக கல்வான் பகுதியை விட்டு சீனா வெளியேறவில்லை. அதேபோல் பாங்காங் திசோ பகுதியில் இருந்து சீனா தனது படைகளை திரும்ப பெறவில்லை. இந்த பாங்காங் திசோவில்தான் வரும் காலத்தில் பெரிய அளவில் பிரச்சனை நடக்கும் என்று கூறுகிறார்கள். இந்த இடம் மிகவும் முக்கியமானது ஆகும்.

ஏன் முக்கியம்
இந்த பாங்காங் திசோ பகுதி என்பது லடாக் பகுதிக்கு சீனாவில் இருந்து வரும் ஒரு நுழைவு வாயில் போன்றது. இங்கு இருக்கும் பாங்காங் திசோ நதி சீனாவிற்கு கொஞ்சம் வலிமை அளிக்கிறது. இந்த பகுதியை மொத்தமாக கைப்பற்றினால், எதிர்காலத்தில் போர் வரும் போது எளிதாக வெற்றிபெறலாம். பாங்காங் திசோ பகுதியை கைப்பற்றும் நாடு மட்டுமே எதிர்காலத்தில் அங்கு ஆதிக்கம் செலுத்த முடியும்.

யார் கட்டுப்பாட்டில் உள்ளது
தற்போது இந்த இடம் இரண்டு நாடுகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. அதாவது பாங்காங் திசோ பகுதியை மொத்தம் 8 பிங்கர்கள் எனப்படும் கட்டுப்பாட்டு பகுதிகளாக பிரித்து இருக்கிறார்கள். இதில் முதல் 4 பகுதியை இந்தியாவும், அடுத்த 4 பகுதியை சீனாவும் கட்டுப்படுத்தி வருகிறது. இந்த பகுதி அனைத்தும் மொத்தமாக வேண்டும் என்று இந்தியா கோரிக்கை வைத்து வருகிறது.

சீனாவின் கோரிக்கை
சீனாவும் இந்த 8 கட்டுப்பாட்டு பகுதியும் வேண்டும். அதோடு சேர்த்து கல்வான் பகுதியும் வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறது. மேலும் அங்கு இருக்கும் ச்சுல் பகுதியையும் சீனா கேட்டு வருகிறது. இங்குதான் கடந்த மே 5ம் தேதி இந்திய வீரர்கள் ரோந்து பணிகளை மேற்கொள்ளும் போது, சீனா வீரர்கள் சண்டை போட்டார்கள். பாங்காங் திசோவின் பிங்கர் பகுதி 4 முதல் 8 வரை மொத்தம் 8 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

மொத்தம் 8 கிலோ மீட்டர் தூரம்
இந்த 8 கிலோ மீட்டர் தூரம்தான் தற்போது பிரச்சனையாக மாறியுள்ளது. பேச்சுவார்த்தைக்கு பின்பும் கூட இங்கிருந்து சீன படைகள் வெளியேறவில்லை. இந்த இடத்தில் இருந்து வெளியேற சீனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் பாங்காங் திசோ பகுதியில் பதற்றம் நீடிக்கும், பிரச்சனை தொடரலாம் என்று கூறுகிறார்கள் .












Click it and Unblock the Notifications