லடாக் எல்லையில் ஊடுருவிய சீனா ராணுவ வீரர்கள் வெளியேற ஜின்பிங் உத்தரவு!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் லடாக் எல்லையில் ஊடுருவிய சீனா ராணுவ வீரர்களை வெளியேறுமாறு சீனா அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் நாட்டு பகுதிக்கு திரும்பியுள்ளனர்.
லடாக் எல்லையில் தொடர்ந்தும் சீனா ராணுவ வீரர்கள் ஊடுருவி வருகின்றனர். அண்மையில் 100 இந்திய ராணுவ வீரர்களை 300 சீன ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.
அதன் பின்னர் சீன கிராம மக்களும் இந்திய பகுதிக்குள் ஊடுருவினர். இந்த நிலையில் சீனா அதிபர் ஜின்பிங் இந்தியா வருகை தந்த போது 1,000 சீனா ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவினர்.
இந்த ஊடுருவல் கவலை தருகிறது என்று தம்மை சந்தித்த ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். பின்னர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜின்பிங்கும் சரியான எல்லை வரையறை இல்லாததால் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று கூறினார்.
இந்த நிலையில் இன்று இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு சீனா கிளம்பிய ஜின்பிங் தமது படையினரை இந்திய பகுதியில் இருந்து திரும்பி வருமாறு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவி இருந்த சீனா ராணுவ வீரர்கள் தங்களது நாட்டுப் பகுதிக்கு திரும்பினர்.