14 ரூபாய் வாட்டர் பாட்டிலை ரூ. 30க்கு விற்ற ஜெய்ப்பூர் தியேட்டர்... ரூ. 5 லட்சம் அபராதம்
ஜெய்ப்பூர்: நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக குடிநீர் பாட்டிலுக்கு பணம் வசூலித்ததாக தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 5 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கக் கூறியும், முறைகேடு செய்ததற்காக தியேட்டர் நிர்வாகத்திற்கு ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து ராஜஸ்தான் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனோஜ்குமார், சில ஆண்டுகளுக்கு முன் ஜெய்ப்பூரில் உள்ள தியேட்டர் ஒன்றில் படம் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கடையில், குடிநீர் பாட்டில் வாங்கியுள்ளார்.
ரூ. 14 மதிப்புள்ள அந்த பாட்டிலுக்கு அவரிடம் இருந்து ரூ.30 வசூலித்துள்ளார் கடைக்காரர். இதனால் அதிர்ச்சியடைந்த மனோஜ், இது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில், தியேட்டர் நிர்வாகம் குடிநீர் பாட்டிலுக்கு அதிக கட்டணம் வசூலித்து வந்தது உறுதி படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக விலைக்கு குடிநீர் பாட்டிலை விற்றதற்காக மனோஜ் குமாருக்கு தியேட்டர் நிர்வாகம் ரூ. 5 ஆயிரம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
அதோடு, முறைகேடு செய்து படம் பார்க்க வந்தவர்களுக்கு அதிக விலையில் குடிநீர் பாட்டில்களை விற்று வந்த குற்றத்திற்காக தியேட்டர் நிர்வாகத்திற்கு ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.