சாதி-மத அடிப்படையில் பிளவுபட்டால்.. இந்தியா பலவீனம் ஆகிடும்.. ஒற்றுமைக்கு குரல்கொடுத்த உபி முதல்வர்
போபால்: உத்தரபிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்தியாவின் பலம் ஒற்றுமை என்றும், சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டால் நாடு பலவீனம் அடையும் என்றும் பேசியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் கடந்த 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி கக்கோரி சம்பவம் நடைபெற்றது. ஆங்கிலேய ஆட்சியின் போது ரயிலை நிறுத்திய சுதந்திர போராட்ட வீரர்கள் அதில் இருந்த பணத்தை கைப்பற்றி சென்றனர்.
சுதந்திர போராட்டத்திற்காக ஆயுதங்கள் வாங்க பணத்தை எடுத்துச்சென்றனர். இந்த சம்பவத்தின் நினைவு நாளை முன்னிட்டும், இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டியும், இன்று லக்னோவில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உலக நாடுகளுக்கு வழிகாட்டி
இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவின் பலமே ஒற்றுமைதான். இந்தியாவின் 135 கோடி மக்களும் ஒருங்கிணைந்து பேசும் போது, உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மட்டும் இந்தியா இருக்காது, ஜனநாயகத்தின் தாயாக உலக நாடுகளுக்கு வழிகாட்டியாகவும், பிரதிநிதியாகவும் மாறும். நாம் சாதி, மதம், இனம், மொழியாக பிளவு பட்டால் அது நமது பலத்தை பிரித்து பலவீனப்படுத்தும். வளர்ச்சியை தடுக்கும். இந்தியா தற்போது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது.

பலவீனப்பட்டுவிடக்கூடாது
வளர்ச்சிக்கு பாதிக்கப்பட்டு, சீர்குலைவு மற்றும் அராஜக நிலையை ஏற்படுத்தி நாட்டின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எந்த வழியிலும் நாடு மீண்டும் பலவீனப்பட்டுவிடக்கூடாது என்பது மட்டுமே நமது தீர்க்கமான முடிவாக இருக்க வேண்டும்" என்றார்.
மேலும் ''இந்தியாவின் பலமே ஒற்றுமைதான் எனவும், நாட்டு மக்கள் சாதி, மத அடிப்படையில் பிளவு பட்டால் இந்தியா பலவீனம் ஆகிவிடும்'' என்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.

கக்கோரி இரயில் கொள்ளை
கக்கோரி இரயில் கொள்ளை சம்பவம் என்பது இந்திய சுதந்திர போராட்டத்தின் போது, இந்துஷ்தான் சோசியலிச குடியரசு என்ற அமைப்பினரால் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக பெரிய அளவில் அரங்கேற்றப்பட்ட கொள்ளை சம்பவமாகும். இது தற்போது உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோவுக்கு அருகில் உள்ள கக்கோரி என்னுமிடத்தில் நிகழ்ந்ததால் இதற்கு அந்த பெயர் வந்தது. கடந்த 1925ம் ஆண்டு இதே நாள் நிகழ்த்தப்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு லட்சம் கொள்ளை
அன்றைய வடக்கு மாகாணமான சகரன்புரிலிருந்து, உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நோக்கி வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ்காரர்களின் ரயிலில் பணம் கொண்டுவரப்படுவதாகவும் அதனை கொள்ளையடிப்பதற்காகவும் இந்திய சுதந்திர போராட்ட அமைப்பினர் திட்டமிட்டனர். அதன்படி ரயில் கக்கோரி என்னும் இடத்தில் வந்த போது ரயிலை நிறுத்தி அங்கிருந்த காவலர்களை அடித்து தாக்கியதோடு அந்த பணத்தையும் கொள்ளையடித்தனர். அந்த காலக்கட்டத்தில் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள கிழக்கிந்திய பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications