அரவை கூலி ரூ4 விவகாரம்.. ஜாதி மோதலாகி துப்பாக்கிச் சூடாக வெடித்தது! இரு தலித்துகள் பலி!!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இரு பிரிவினரிடையேயான மோதல் வெடித்து துப்பாக்கிச் சூடு வரை சென்றிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ளது மொகிந்த்பூர் கிராமம். இங்கு உயர் சாதி வகுப்பினரும். தலித்துகளும் வசிக்கிறார்கள். உயர் சாதி வகுப்பினருக்கு சொந்தமான மாவு மில்லில் தலித் ஒருவர் கோதுமை மாவு அரைப்பதற்காக சென்றார்.
அதற்கு அரவை கூலி ரூ.4 கொடுப்பது தொடர்பாக தலித்துக்கும், மில் உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இருவருக்கும் ஆதரவாக அவர்களைச் சார்ந்த வகுப்பினர் வந்து மோதலில் ஈடுபட்டார்கள்.
இது வன்முறையாக வெடித்தது. இதில் மாவுமில் உரிமையாளரின் ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இத்துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து தீ வைப்பு சம்பவங்களும் நடந்தேறின. பின்னர் மோதல் நிகழ்ந்த கிராமத்துக்கு சென்ற போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய 4 பேரை கைது செய்தனர்.
இந்த மோதல் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.