பந்தா காட்ட ஸ்கூலுக்கு துப்பாக்கியுடன் போன மாணவர்... பீதியில் உறைந்த ஆசிரியர்கள்!
வகுப்புத் தோழர்களிடம் காமிப்பதற்காக பள்ளிக்குத் துப்பாக்கிக் கொண்டுச் சென்ற 10ம் வகுப்பு மாணவர் கைது.
குருகிராம்: நாட்டுத் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த பத்தாம் வகுப்பு மாணவரை ஹரியானா போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி- குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஜார்சா. அங்குள்ள ஜகாபுரா பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவர் மகேஷ் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெற்றோரை இழந்த மகேஷ் தனது மாமாவுடன் பிரேம்புரியில் வசித்து வந்துள்ளார்.
வழக்கம்போல், செவ்வாய்கிழமையன்று பள்ளிக்குச் சென்ற மகேஷ், தனது நண்பர்களிடம் நாட்டுத் துப்பாக்கி ஒன்றைக் காட்டுவதற்காக புத்தகப்பையில் மறைத்து வைத்து எடுத்துச் சென்றுள்ளார். ஹோலி பண்டிகை நெருக்கத்தில் இருந்ததால், மாணவர்கள் யாரும் வண்ணப்பொடிகள் வைத்துள்ளனரா என தலைமையாசிரியரின் உத்தரவுப்படி ஆசிரியர்கள் மாணவர்களின் புத்தகப்பைகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது பாலீதீன் பை ஒன்றை எடுத்துக் கொண்டு மகேஷ் தப்பியோட முற்பட்டுள்ளான். அவனைத் துரத்திப் பிடித்த ஆசிரியை, மகேஷ் கையில் இருந்த பாலீதின் பையில் துப்பாக்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இது தொடர்பாக மற்ற ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மகேஷிடம் விசாரணை ஏதும் நடத்தாமல், தனியாக ஒரு அறையில் அமர வைத்த ஆசிரியர்கள், இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார், விசாரணைக்குப் பிறகு மகேஷைக் கைது செய்தனர். மேற்கொண்டு அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்தத் துப்பாக்கியை சர்மா என்ற 21 வயது நண்பரிடம் இருந்து பெற்றதாக மகேஷ் தெரிவித்துள்ளான்.
சர்மா அதே பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வருவது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சர்மாவைக் கைது செய்த போலீசார், அவரிடம் அந்தத் துப்பாக்கி எப்படி வந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக மகேஷின் நடவடிக்கை சரியில்லை எனத் தெரிவித்துள்ள அக்கம்பக்கத்தார், தீய நண்பர்களின் சகவாசம் அவனுக்கு இருந்ததாகவும் கூறியுள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மகேஷ், சர்மா இருவரையும் 14 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முதல்கட்ட விசாரணையில் மகேஷ் பள்ளிக்கு எடுத்துவந்த நாட்டுத் துப்பாக்கியில் தோட்டாக்கள் இல்லையென்றும், அதனை தனது நண்பர்களிடம் காட்டுவதற்காக அவன் எடுத்து சென்றதும் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களை தாக்குவதும், கொலை செய்வதும் அதிகரித்து வருவதால், துப்பாக்கியுடன் மகேஷைப் பார்த்ததும் அவன் படித்த பள்ளி ஆசிரியர்கள் பயந்து போய் விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications