இசை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய 10ம் வகுப்பு மாணவி 4 பேரால் சீரழிப்பு
பெங்களூர்: பெங்களூர் அருகே உள்ள கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது கண்ணமங்களா. அந்த கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி ஒருவரின் 16 வயது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கன்னட ராஜ்யோத்சவா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த இசை நிகழ்ச்சியை பார்க்க பக்கத்து கிராமத்திற்கு சென்றார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த நான்கு பேர் அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து அதை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த அரை மணிநேரம் கழித்து அந்த வழியாக சென்ற ஒருவர் மாணவி மயக்க நிலையில், அரை நிர்வாண கோலத்தில் கிடப்பதை பார்த்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.
மயக்கம் தெளிந்த மாணவி தன்னை சீரழித்தவர்களில் 2 பேரை தனக்கு தெரியும் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.