பெங்களூர்-சென்னை நடுவே தடம் புரண்ட ஹவுரா எக்ஸ்பிரஸ்- பயணிகள் உயிர் தப்பினர்!!

பெங்களூர் யஸ்வந்தபுரா நிலையத்தில் இருந்து ஹவுரா செல்லும் ரயில் (எண் 12864 ) நேற்று இரவு 8 மணிக்கு கிளம்பியது. இந்த ரயில் இரவு 10.45 மணிக்கு ஆந்திர மாநிலம் குப்பம் ரயில் நிலையத்திற்கு மிக அருகே சென்றுகொண்டிருந்தபோது, மெயின் பாதையைவிட்டு பயனற்று கிடந்த மற்றொரு டிராக்கில் எதிர்பாராதவிதமாக பயணித்தது.
இன்ஜின் டிரைவர் பாலகிருஷ்ணா இதை கவனித்துவிட்டு சுதாரித்துக்கொண்டார். சற்று தூரம் போனாலும் அந்த தண்டவாளம் முடிவடைந்து விடும் என்பதை உணர்ந்த பாலகிருஷ்ணா பெரும் ஆபத்து ஏற்படப்போவதை அறிந்தார். உடனடியாக அவசர கதியில் பிரேக் பிடித்துள்ளார்.
திடீர் பிரேக் போட்ட அதிர்வால் இரு ரயில் பெட்டிகளின் சக்கரங்கள் தண்டவாளத்தைவிட்டு கீழே இறங்கிவிட்டன. அதிருஷ்டவசமாக ரயில் பெட்டி கவிழவில்லை. தூக்கத்தில் இருந்த பயணிகள் ரயிலின் அதிர்வால் கண்விழித்து பயந்து போய் அலறினர்.
அதற்குள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குப்பம் ரயில் நிலைய அதிகாரிகள், பயணிகளை சமாதானப்படுத்தினர். ஜோலார்பேட்டையில் இருந்து மீட்பு குழு குப்பம் ரயில் நிலையத்துக்கு விரைந்தது. தண்டவாளத்தைவிட்டு கீழே இறங்கியிருந்த இரு ஸ்லீப்பர் கோச் பெட்டிகளையும், இன்ஜினையும் தூக்கி பழையபடி டிராக்கில் வைத்தனர்.
இதன்பிறகு கால தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. ரயில் தடம் புரண்டதால், பெங்களூரிலிருந்து குப்பம் வழியாக சென்னைக்கு செல்லும் சென்னைமெயில், காவேரி எக்ஸ்பிரஸ் உட்பட பல ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டன. இன்ஜின் டிரைவரின் சமயோஜிதத்தால் 100க்கும் மேற்பட்ட பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர்.












Click it and Unblock the Notifications