அப்பாடா.. சித்தராமையா கருத்தால் கர்நாடக கூட்டணி அரசுக்கு நிம்மதி
பெங்களூர்: கர்நாடகாவில் கூட்டணி அரசுக்கு ஆபத்தில்லை என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ்-மஜத கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடக்கிறது. மஜதவின் குமாரசாமி முதல்வராக உள்ளார். முன்னாள் முதல்வர், சித்தராமையா இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
ஆனால், சித்தராமையாவின் ஆதரவாளர்கள் பலருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. கோபத்தில், மங்களூர் அருகேயுள்ள இயற்கை வைத்தியசாலையில் 11 நாட்களாக சென்று சிகிச்சை என்ற பெயரில் ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தியபடி இருந்தார் சித்தராமையா.
ஆதரவு எம்எல்ஏக்களுடன் அவர் பேசுகையில், இந்த ஆட்சி இன்னும் ஓராண்டு கூட தாங்காது என்று அவர் தனது ஆதரவாளர்களிடம் கூறியது ஆடியோவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை இந்த சர்ச்சைக்கு காங்கிரஸ் தலைவர்களோ, சித்தராமையா பதில் அளிக்கவில்லை.
இதனால் மஜத தலைவர்கள் அதிருப்தியில் இருந்தனர். ஆனால், இந்த சர்ச்சைகளுக்கு பெங்ளூரில் அளித்த பேட்டியில் சித்தராமையா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வீடியோ பேச்சை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள்விடுத்துள்ள சித்தராமையா, அது எந்த சூழ்நிலையில் பேசப்பட்டது என்பதே மறந்துவிட்டது என்றும் கூட்டணி ஆட்சி தொடரும் என்றும் கூறியுள்ளார். சித்தராமையா கருத்தால் காங்கிரஸ்-மஜத கூட்டணி பிளவுக்கு தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது.