கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது மதமோதல் தடுப்பு மசோதா- பிரதமருக்கு மோடி கடிதம்
அகமதாபாத்: மத்திய அரசு கொண்டுவர உள்ள மதமோதல் தடுப்பு மசோதா, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் மோடியின் இக்குற்றச்சாட்டை நிராகரித்து பிரதமர் மன்மோகன்சிங் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத மோதல் தடுப்பு மசோதாவை நடப்பு குளிர் கால கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மத மோதல் தடுப்பு மசோதாவை முன் மொழியும் முன்னர் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுடனும் இது குறித்து விரிவாக ஆலோசிக்க வேண்டும். இல்லையென்றால் இந்த மசோதா எதற்காக தாக்கல் செய்யப்படுகிறதோ அதற்கு எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும்.
மத மோதல் தடுப்பு மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மாநில அரசு பட்டியலில் உள்ள விஷயங்கள் தொடர்பாக சட்டம் இயற்றுவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று கூறியுள்ளார்.
பிரதமர் நிராகரிப்பு
இந்நிலையில், மோடியின் கருத்துக்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், வகுப்பு மோதல்களை தடுப்பதற்கான அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களையும் கேட்டு மத்திய அரசு இந்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவை, குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி, இதனை விரைவாக நிறைவேற்ற முயலுவோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications