ஒப்புக் கொள்கிறேன்.. கோவாவில் சமூக பரவல் ஆரம்பம்.. முதல்வர் பிரமோத் சாவந்த்
பனாஜி: கோவாவில் சமூக பரவல் தொடங்கிவிட்டதை நான் ஒப்புக் கொள்கிறேன் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்துவிட்டது. எனினும் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என மத்திய அரசு கூறிவருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறுகையில் கோவா முழுவதும் ஏராளமான கொரோனா கேஸ்கள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளன. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவி வருகிறது.

கடுமை
எனவே கோவாவில் கொரோனா சமூக பரவல் உள்ளது. அதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். மாநிலத்தில் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை அரசு கடுமையாக பின்பற்றி வருகிறது. கோவாவில் மட்டும் தான் இங்கு நுழையும் அனைத்து நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறது.

போலீஸார்
அது போல் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அனுப்பி வருகிறது. போலீஸார் திறமையாக பணியாற்றி வருகிறார்கள். ஆனால் சில நேரங்களில் போலீஸாருக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. சமூக விலகலையும் முகக் கவசம் அணிவதையும் கடுமைப்படுத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அதிகரிக்க
குறிப்பாக மார்க்கெட் பகுதிகளில் இந்த நடைமுறைகளை கட்டாயப்படுத்த கூறியுள்ளேன் என்றார். ஒரு மாதத்திற்கும் மேலாக கோவா கொரோனா இல்லாத மாநிலமாக இருந்தது. மே மாதத்திற்கு பின்னர் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

கோவா
கோவாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,039 பேராக உயர்ந்துள்ளது. கோவாவில் 667 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 370 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதுவரை இருவர் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications