சிதறடிக்காமல் விட மாட்டோம்
சிமி அமைப்பினருடன் எங்களுக்கு இருந்த தொடர்பைப் பயன்படுத்தி எங்களுக்குத் தேவையான ஆயுதங்களை உள்ளூரைச் சேர்ந்தவர்களிடமிருந்து பெற்று வந்தோம்.
எங்களது முதல் திட்டத்தை மேற்கு வங்கத்திலிருந்து தொடங்கத் திட்டமிட்டிருந்தோம். அஸ்ஸாமிலும் எங்களுக்குக் கிளைகள் இருந்தன. அங்கு 2வது கட்டமாக தாக்குதலுக்குப் பயன்படுத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் தற்செயலாக புர்த்வானில் குண்டு வெடித்து விட்டதால், மொத்த செயல்பாடுகளையும் மறைக்க தீவிரமாக முயன்றோம். உள்ளூரைச் சேர்ந்தவர்களும் எங்களுடன் தீவிரமாக செயல்பட்டனர். சிக்கினால் அவர்களுக்கும் ஆபத்து என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் அதற்குள் அனைத்தும் வெளி வந்து விட்டது.
சாட்சியங்களை, அடையாளங்களை முடிந்தவரை அழித்துவிடுமாறு எங்களது அமைப்பினருக்கு உத்தரவிட்டோம். ஆனால் எங்களது நோக்கத்திலிருந்து நாங்கள் பின்வாங்கவில்லை. எப்படியும் ஒரு நாள் தாக்குதல் நடத்த முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.
சில காலம் தலைமறைவாக இருக்குமாறு எங்களது மத்திய தலைமைக் கமிட்டி கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் நோக்கத்தை மறந்து விட வேண்டாம் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது. அனைத்தும் அமைதியாகும் வரை நாங்கள் காத்திருப்போம். பின்னர் மீண்டும் எங்களது வேலையைத் தொடங்குவோம். இன்னும் 5 ஆண்டுகள் ஆனாலும் கூட நாங்கள் எங்களது இலக்கை விட மாட்டோம், அடைந்தே தீருவோம்.
எங்களது இயக்கத்தினர் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் தப்பிப் போய் விட்டனர். சிலர் வங்கதேசத்திற்குள் போய் விட்டனர். எங்களது உத்தரவுக்காக அவர்கள் காத்துள்ளனர்.
அவாமி லீக்கையும், அதன் ஆட்சியையும் சீர்குலைத்து சின்னாபின்னமாக்குவதில் ஜமாத்துல் அமைப்பு உறுதியாக உள்ளது. அதிலிருந்து அது பின்வாங்காது. வங்கதேசத்தில் ஜமாத் இ இஸ்லாமியின் ஆட்சி கண்டிப்பாக வரும். அதில் மாற்றம் கிடையாது என்று கூறியுள்ளான் சம்பு.
பெண்கள் பிரிவை தொடங்கத் திட்டமிட்ட சம்புவின் மனைவி
இதற்கிடையே, சம்புவிடம் நடத்திய சமீபத்திய விசாரணையில் மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது சம்புவின் மனைவியான பாத்திமா, இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் ஒடிஷாவில் மகளிர் தீவிரவாதப் பிரிவை தொடங்க திட்டமிட்டு வந்தார். இதற்கான பணி பாத்திமாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது.
தங்களது திட்டங்களில் தனது மனைவி மட்டுமல்லாமல், பிற தீவிரவாதிகளின் மனைவியருக்கும் முக்கியப் பங்கு உள்ளதாகவும் சம்பு கூறியுள்ளான். மேற்கு வங்கத்திற்கு குண்டுகளை சாலை மார்க்கமாக கொண்டு செல்வது உள்ளிட்ட பல வேலைகளை பெண்கள் மூலமாக இவர்கள் செய்துள்ளனர். சாலை மார்க்கமாகப் போகும்போது வெடிகுண்டு சீக்கிரமாக சூடாகாது என்பதால் இப்படிச் செய்வார்களாம்.
மேலும், பெண்களை பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி பல்வேறு பெண்களையும் தங்களது இயக்கத்திற்கு சேர்க்கும் நடவடிக்கையிலும் இந்த தீவிரவாதிகள் ஈடுபட்டிருந்தனர். மேலும் சில பெண்களை ஹனி டிராப் ஆக பயன்படுத்தி, அரசு ஊழியர்களை வலையில் வீழ்த்தி பல்வேறு சலுகைகளையும், முக்கியத் தகவல்களையும் இவர்கள் பெற்றுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் இப்படி பல காரியங்களை இவர்கள் சாதித்துள்ளனராம். பிற மாநிலங்களிலும் கூட இதேபோல இவர்கள் செயல்பட்டிருப்பதாகவும் தேசியப புலனாய்வு ஏஜென்சி சந்தேகிக்கிறது.
ஜமாத்துல் அமைப்பின் மத்திய குழு, தனது அமைப்பை தீவிரவாத அமைப்பு போல இல்லாமல் ராணுவம் போல வலுவாக்க தீர்மானித்து அந்த கோணத்தில் நடவடிக்கை எடுத்து வந்ததாம். எனவேதான் ராணுவத்தினர் செய்வதுபோலவே இவர்களும் செயல்பட்டு வந்துள்ளனர்.