நாங்கள் சிக்கியிருக்கலாம்.. ஆனால் வங்கதேசம் சிதறும்: புர்த்வான் குண்டுவெடிப்பு சதிகாரன்
டெல்லி: புர்த்வான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிக்கியுள்ள முக்கிய சதிகாரனும், இந்த சம்பவத்தில் முக்கிய மூளையாக திகழ்ந்தவனுமான எஸ்.கே.ரகமதல்லா என்கிற சாஜித் என்கிற சம்புவிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் சம்பு பல முக்கியத் தகவல்களைத் தெரிவித்துள்ளான்.
சம்பு கூறியுள்ள தகவல்களைப் பார்த்தால் இதில் மிகப் பெரிய சதிகள், திட்டங்கள் அடங்கியிருப்பதாக தெரிகிறது. மற்ற குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களையும், சம்பு கூறியுள்ள தகவல்களையும் தற்போது அதிகாரிகள் ஒப்பிட்டும் பார்த்து வருகின்றனர்.
விசாரணையின்போது சம்பு கூறிய முக்கியத் தகவல் என்னவென்றால், எங்களுக்கு ஒரே நோக்கம்தான். அது, வங்கதேசத்தைத் தாக்கி சின்னாபின்னாப்படுத்துவது என்பது மட்டுமே. நாங்கள் இந்தியாவைக் குறி வைக்கவில்லை. இந்தியா எங்களது இலக்கும் அல்ல. அந்தத் திட்டமும் எங்களிடம் இல்லை. மேற்கு வங்கத்தை எங்களது தாக்குதலுக்குத் தேவையானதை உருவாக்கிக் கொள்ளும் களமாக பயன்படுத்திக் கொண்டோம். எங்களது தாக்குதலை இந்தியாவுக்கு வெளியில் நடத்தவே திட்டமிட்டிருந்தோம்.
2009ம் ஆண்டு எங்களது திட்டத்தை செயல்பாடுகளை ஆரம்பித்தோம். எங்களது குழுக்களை இங்கு நிறுவுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் அப்போது இருக்கவில்லை. திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தது. (NEXT)
ராணுவ வீரரின் மகன்
நான் வங்கதேச குடிமகன் ஆவேன். எனது தந்தை பெயர் லெப்டினென்ட் சித்திக் மியான். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். நான் வங்கதேசத்தில், அவாமி லீக் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி கைதாகி சிறைவாசம் அனுபவித்துள்ளேன். வங்கதேசத்தில் நான் நாராயன்கஞ்ச் மாவட்டம், பந்தர் காவல் நிலையத்திற்குட்பட்ட வில் பராஜிகண்டா என்ற இடத்தில் வசித்து வந்தேன்.
ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் அமைப்பாநது ஒரு முக்கியக் கமிட்டியை வைத்துள்ளது. அதுதான் இந்தத் தாக்குதலை திட்டமிட்டது. முதலில், நாங்கள் மேற்கு வங்கத்தில் மக்களோடு மக்களாக ஊடுறுவினோம். இந்த நடவடிக்கையின் தலைவர் பொறுப்பை எனக்கு அளித்திருந்தனர். நான் உள்ளூரில் முதலில் சில தலைவர்களை நட்பு வட்டத்தில் சேர்த்தேன். மதத் தலைவர்களையும் எனது நண்பர்களாக்கிக் கொண்டேன்.
மேற்கு வங்க எல்லைப் பகுதியில் பல முகாம்கள் இயங்கி வருகின்றன. இந்த முகாம்களை உள்ளூர் அரசியல்வாதிகள் அமைத்துள்ளனர். மேற்கு வங்கத்திற்குள் ஊடுறுவி வருவோருக்காக இது அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் நான் ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றைப் பெற்றேன். பான் கார்டும் கூட எனக்கு கிடைத்தது.
இந்தியாவில் 500க்கும் மேற்பட்டோரைக் கொண்ட ஒரு படையை நிறுவ நாங்கள் முயன்று வந்தோம். வங்கதேசத்திலிருந்து பலரை இங்கு அழைத்து வந்து அவர்களுக்குப் பயிற்சி அளித்து பின்னர் மீண்டும் எங்களது நாட்டுக்கு அனுப்பி வைப்போம். அனைவரும் தாக்குதலுக்குத் தயாராகி வந்தனர். எங்களது முதல் தாக்குதலை நடத்த சில மாதங்களே இருந்த நிலையில்தான் தற்செயலாக புர்தவானில் உள்ள முகாமில் குண்டு வெடித்து எங்களது திட்டம் கெட்டுப் போய் விட்டது. (NEXT)
இந்தியா - வங்கதேச நல்லுறவு பிடிக்கவில்லை
வங்கதேசத்தைத் தாக்க இந்தியாவை ஒரு களமாகவே ஜமாத்துல் அமைப்பு கருதி இங்கு எங்களது நடவடிக்கைகளை மாற்றியது. இந்தத் தாக்குதல் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீர்கெடும் என்பது ஜமாத்துலின் திட்டம். இந்தியா, வங்கதேசம் இடையே வலுவான உறவு இருப்பது எங்களுக்குப் பிடிக்கவில்லை. எங்களது இலக்கு, அகன்ற வங்கதேசத்தை உருவாக்க வேண்டும், ஷரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே. இதற்காகவே இரு நாட்டு உறவுகளையும் சீர் கெடுக்க இந்தியாவைக் களமாக பயன்படுத்தினோம்.
கெளசர், ஜியாவுல் ஹக் ஆகியோர் என்னுடன் மிகவும் நெருக்கமாக பழகி செயல்பட்டு வந்தனர். பல அடிப்படை வேலைகளை கெளசர்தான் செய்வார். ஆயுதங்களைக் கொண்டு செல்வது, பொருட்களை கொள்முதல் செய்வது, பணத்தை தீவிரவாத குழுக்களுக்கு அளிப்பது அவரது வேலையாகும். இந்தப் பணம் அனைத்தும் வங்கதேசத்திலிருந்து ஜமாத்துல் அமைப்பிடமிருந்து வந்து சேரும்.
பல்வேறு வழிகளில் பணத்தை அனுப்புவார்கள். உயர் மட்டத் தலைவர்களுக்கு வங்கிகளில் நேரடியாக பணத்தை டெபாசிட் செய்து விடுவார்கள். மற்ற பணம் பல்வேறு நபர்கள் மூலம் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும்.
பெரும்பாலான பணம் அதிகாரிகளுக்கு லஞ்சம் தருவதற்கும், நிலம் வாங்குவதற்கும், பயிற்சி முகாம்களை அமைப்பதற்கும், ஆயுதக் கொள்முதலுக்குமே பயன்படுத்தப்பட்டது. உள்ளூரிலேயே நாங்கள் பெரும்பாலும் ஆயுதங்களையும் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொள்வோம். வெளியிலிருந்து கொண்டு வருவது பாதுகாப்பாக இருக்காது என்பதால் உள்ளூரிலேயே அதை வாங்கி வந்தோம்.