மருமகள், 3 பேரன்கள் உடல் கருகி பலி: முன்னாள் காங். எம்.பி., மனைவி, மகன் கைது
வாரங்கால்: வாரங்காலில் மருமகள் மற்றும் 3 பேரன்கள் உயிருடன் எரிந்து பலியானது தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சிரிசில்லா ராஜய்யா, அவரது மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்காலில் வசித்து வருபவர் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சிரிசில்லா ராஜய்யா. அவரது மகன் அனில் குமாரும், சரிகா என்பவரும் காதலித்து கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு அபினவ்(9), அயன்(5), ஸ்ரீயன்(3) என மூன்று மகன்கள்.

சரிகா தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது வரதட்சணை புகார் அளித்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சரிகா மற்றும் அவரது மகன்கள் உடல் கருகி பலியாகினர்.

வரதட்சணை புகார் கொடுத்த பிறகு அனில் குமார் தரை தளத்திலும், சரிகா தனது மகன்களுடன் முதல் தளத்திலும், ராஜய்யா தனது மனைவி மாதவியுடன் இரண்டாவது தளத்திலும் வசித்து வந்தனர். இந்நிலையில் முதல் தளத்தில் சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் சரிகாவும், அவரது மகன்களும் உடல் கருகி பலியாகினர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின்பேரில் ராஜய்யா, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மாதவி தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சரிகாவின் சகோதரி அர்ச்சனா கூறுகையில்,
ராஜய்யாவும், அவரது மனைவி, மகனும் என் சகோதரியை கொடுமைபடுத்தி வந்தனர். ராஜய்யாவின் வீட்டில் வசிப்பது கஷ்டமாக உள்ளது என்று சரிகா கடந்த ஆண்டு எங்களிடம் தெரிவித்தார். ஆனால் நாங்கள் தான் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தோம். அவர் தனது கணவர் மற்றும் ராஜய்யா மீது வாரங்கால் போலீசில் புகார் அளித்திருந்தார். என் சகோதரி தற்கொலை செய்திருக்க மாட்டார். அவரை ராஜய்யாவின் குடும்பத்தார் தான் கொலை செய்துவிட்டனர் என்றார்.












Click it and Unblock the Notifications