ஜெ. வழக்கில் அப்பீல் செய்ய கர்நாடகாவை நெருக்குகிறார் சாமி: காங். சட்டப்பிரிவு காட்டம்!
பெங்களூர்: ஜெயலலிதா வழக்கில் அப்பீல் செய்ய சுப்பிரமணியன் சுவாமி தேவையில்லாமல் கர்நாடகாவுக்கு நெருக்கடி அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில சட்டம் மற்றும் மனித உரிமைகள் பிரிவு தலைவர் சி.எம்.தனஞ்சய் தெரிவித்தார்.
பெங்களூரில் இன்று அவர் அளித்த பேட்டி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, வழக்கை கர்நாடகா நடத்தியது. மற்றபடி, வழக்கிற்கும் கர்நாடக அரசுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.
தற்போது ஹைகோர்ட் ஜெயலலிதாவை நிரபராதி என்று விடுதலை செய்துவிட்டது. இனிமேல் கர்நாடகாவுக்கும், ஜெயலலிதா வழக்குக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இந்த வழக்கில், சுப்பிரமணியன் சுவாமி மற்றும் திமுகவின் அன்பழகன் ஆகியோர்தான் பார்ட்டிகள். கர்நாடகா வழக்கில் ஒரு பார்ட்டியே கிடையாது.
நிலைமை இப்படி இருக்க, மேல்முறையீடு செய்ய கர்நாடகாவுக்கு அதிகாரம் இல்லை என்பதே எங்கள் கருத்து. இதை கர்நாடக அரசிடம் தெரிவித்துள்ளோம். இறுதியாக அரசு என்ன முடிவு எடுத்தாலும் சம்மதமே. மேலும், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால், நான் செய்வேன் என்பது போன்ற செய்திகளை, சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் கர்நாடக அரசுக்கு சு.சுவாமி நெருக்கடி தருகிறார்.
தேவைப்பட்டால், சு.சுவாமி அல்லது அன்பழகன் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்துகொள்ளட்டும். இவ்வாறு தனஞ்சய் தெரிவித்தார். மேல்முறையீடு செய்ய அரசு சிறப்பு வக்கீல் ஆச்சாரியா அரசுக்கு பரிந்துரைத்த நிலையில், காங்கிரஸ் சட்டப்பிரிவு தலைவர் இவ்வாறு பேட்டியளித்துள்ளது கவனிக்கத்தக்கது.