தேர்தல் தோல்வியால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: மம்தா அட்வைஸ்
5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா: 5 மாநில சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்ரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில், "5 மாநில சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது விருப்படி தேர்வு செய்த வாக்காளர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம். ஜனநாயக நாட்டில் சிலர் வெற்றி பெறுவர், சிலர் தோல்வி அடைவர் நாம் இருவருக்கும் மதிப்பளிக்க வேண்டும். மக்களின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்"என்று பதிவிட்டுள்ளார்.