காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்.. மாட்டிறைச்சி சாப்பிடுவதை அனுமதிப்பார்கள்.. யோகி ஆதித்யநாத் சர்ச்சை
லக்னோ: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் கட்சி மாட்டிறைச்சி உண்பதை அனுமதிப்பார்கள் என்று உபி முதல்வர் யோகி ஆதித்தயநாத் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. இரண்டு கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், அடுத்து 5 கட்ட தேர்தல்கள் அடுத்தடுத்து நடக்க உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

பிரச்சாரம்: இதில் உத்தரப் பிரதேச மாநிலம் ரொம்வே முக்கியமானது. ஏனென்றால் நாட்டிலேயே அதிகபட்சமாக 80 லோக்சபா எம்பி சீட்களை கொண்ட ஒரு மாநிலமாக உ.பி இருக்கிறது. மேலும், பாஜக வலிமையாக உள்ள மாநிலங்களில் ஒன்று என்பதால் அங்கு பாஜக தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அங்கு பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாகக் காங்கிரஸ் குறித்தும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்தும் பரபர கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைக் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாட்டிறைச்சி உண்பதை அனுமதித்துவிடுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
மாட்டிறைச்சி: எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மாட்டிறைச்சி உண்பதை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்துக்கள் பசுவைப் புனிதமாகக் கருதுகிறார்கள். இதனால் இங்குள்ள மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்கிறது. அப்படியிருக்கும் போது இதில் முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்கும் காங்கிரஸின் முயற்சி யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை உத்தரப் பிரதேசத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசும் போதும் சிறுபான்மையினருக்கு மாட்டிறைச்சி உண்ணும் உரிமையைக் காங்கிரஸ் கட்சி வழங்க விரும்புவதாக யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.
உபி சட்டங்கள்: உத்தரப் பிரதேசத்தில் ஏற்கனவே பசு வதைக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் உள்ளன. பசுவதையில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ₹ 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், பசுக்களைக் கொடுமைப்படுத்தினால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹ 3 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். உத்தரப்பிரதேச அரசு கடந்த 2020ஆம் ஆண்டில் பசுவதை தொடர்பான இந்த அவசரச் சட்டத்தை இயற்றி இருந்தது.
உத்தரப் பிரதேச பசு வதை தடுப்பு சட்டம் 2020இன் கீழ், மாநிலத்தில் பசு வதையைக் கட்டுப்படுத்த பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பசுவதை மற்றும் பசு கடத்தலுக்கு இதில் கடுமையான தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீண்டும் மீண்டும் பசுக்களைக் கடத்தும் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது போன்ற கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜாமீனில் வெளியே வர முடியாது: மேலும், முந்தைய சட்டங்களில் பசுவதைக்குப் பயன்படுத்தும் வாகனங்கள் குறித்துத் தெளிவான சட்டங்கள் இல்லாமல் இருந்தது. ஆனால், புதிய விதிகளின் கீழ் பசு கடத்தல் தொடர்பாக தங்களுக்குத் தெரியாது என்பதை வாகன உரிமையாளர் தான் நிரூபிக்க வேண்டும். அப்படி அவர்கள் நிரூபிக்கத் தவறினால் அவர்கள் குற்றம் செய்ததாகக் கருதப்படுவார்கள் என்ற விதிமுறையும் இருக்கிறது. பசுவதை சட்டங்கள் எல்லாமே ஜாமீனில் வெளியே வர முடியாத ஒன்று என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இப்படி நமது நாட்டில் பசுவதைக்கு எதிரான சட்டங்கள் இருந்தாலும் மாட்டிறைச்சி சாப்பிடுவதை எந்தவொரு சட்டமும் கட்டுப்படுத்தவில்லை. இந்தச் சூழலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாட்டிறைச்சி சாப்பிடும் உரிமையை அளித்துவிடுவார்கள் என்று யோகி கூறியுள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது.












Click it and Unblock the Notifications