கர்நாடகா, திரிபுரா ஆளுநர்கள் இன்றுடன் பணி ஓய்வு!
டெல்லி: மத்திய அரசின் கடுமையான நெருக்கடிகளுக்கு இடையே கர்நாடகா மற்றும் திரிபுரா மாநில ஆளுநர்களின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. கர்நாடகா ஆளுநர் பொறுப்பை கூடுதலாக தமிழக ஆளுநர் ரோசையா கவனிப்பார்.
மத்தியில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு அமைந்த நிலையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் பலரை பதவி விலகுமாறு வலியுறுத்தி வந்தது.

மத்திய அரசின் இந்த நெருக்கடியால் உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் நாகாலாந்து மாநில ஆளுநர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் மேற்கு வங்காளம் மற்றும் கோவா ஆளுநர்களும் விரைவில் பதவி விலக உள்ளனர். ஆனால் கேரளா ஆளுநர் ஷீலா தீட்சித் பதவி விலக மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் கர்நாடக மாநில ஆளுநர் பரத்வாஜ் மற்றும் திரிபுரா ஆளுநர் தேவானந்த் கொன்வர் ஆகியோரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இவர்களுக்கு பதவி நீட்டிப்பு எதுவும் வழங்கப்படாததால் இருவரும் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர்.
கர்நாடக ஆளுநரான பரத்வாஜ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சட்ட அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். பின்னர் 2009-ம் ஆண்டு ஜூன் 29-ந் தேதி, கர்நாடகாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதைப்போல முன்னாள் அசாம் அமைச்சரான தேவானந்த் கொன்வர், பீகார் மாநில ஆளுநராக 2009-ம் ஆண்டு ஜூன் 29-ந் தேதி நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் கடந்த ஆண்டு மார்ச் 21-ந் தேதி முதல் திரிபுரா ஆளுநரானார்.
இந்த இரு ஆளுநர்களின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து தமிழக ஆளுநர் ரோசையா கர்நாடக மாநில ஆளுநர் பொறுப்பையும், மிசோரம் மாநில ஆளுநர் புருசோத்தமன், திரிபுரா மாநில ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பர்.












Click it and Unblock the Notifications