எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற காங்கிரஸ் அதிரடி திட்டம்... தேசிய அரசியலில் புதிய 'ட்விஸ்ட்'!
டெல்லி: எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் இரண்டு திட்டங்களை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தோல்வி கிடைத்தது. மொத்தமுள்ள 542 இடங்களுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இதனால், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 10 சதவீத இடங்களில் வெற்றி பெற்றால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும். இந்த நிலையில், எதிர்க்கட்சி இல்லாமல் தனி ஆவர்த்தனம் நடத்துவதற்கான வாய்ப்பை பாஜக பெற்றிருக்கிறது.
இதனை முறியடிப்பதற்கான வியூகங்களை காங்கிரஸ் கட்சி வகுத்துள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியை இணைக்கும் முயற்சிகளும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 5 எம்.பி.க்கள் உள்ளனர்.
இரண்டு கட்சிகளும் இணையும்போது, காங்கிரஸ் கட்சியின் பலம் 57 ஆக உயரும். இதன்மூலமாக எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்துவிட முடியும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், ராகுல் காங்கி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக உள்ளதால், அந்த இடத்திற்கு சரத்பவாரை கொண்டு வந்துவிடலாம் என்ற யோசனையும் காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது.
ஆனால், இந்த யோசனையை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஒப்புக் கொள்ள மாட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். மஹாராஷ்டிராவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் சிறப்பான வளர்ச்சி பெற்று வருவதாகவும், எனவே இந்த முடிவை அவர் ஏற்க மாட்டார் என்றும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இது முடியாதபட்சத்தில், 'பிளான் பி' திட்டத்தையும் காங்கிரஸ் கையில் வைத்துள்ளது. அதன்படி, சுயேட்சை எம்.பி.க்களான சுமலதா, நவ்னீத் ரவிராணா, நம்பாகுமார் சரணியா, மோகன் பாய் டெல்கர் ஆகியோரின் ஆதரவை பெறுவதற்கான முயற்சியிலும் காங்கிரஸ் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications