மோடியை எதிர்கொள்ள "சைபர் ராணுவ"த்தை களமிறக்குகிறதாம் காங்கிரஸ்!
அகமதாபாத்: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி சமூக வலைதளங்கள், இணையம் மூலம் முன்னெடுக்கும் பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குஜராத்தில் தமது சைபர் ராணுவம் களமிறக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவர் அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் இணைய தளங்கள் வழியே தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் கட்சியும் தீர்மானித்து இருக்கிறது என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஷ் தோஷி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவுக்கு பதிலடி கொடுக்க நாங்கள் சைபர் ராணுவத்தை உருவாக்க இருக்கிறோம்.
லோக்சபா தேர்தலில் அது முக்கிய பங்காற்றும். எமது கட்சியின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் இந்த அமைப்பு செயல்படும். இதற்காக எங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.
அகமதாபாத்தில் சைபர் ராணுவத்தினர் 500 பேருக்கு பயிற்சி அளித்திருக்கிறோம். இத்தகைய பயிற்சி மாவட்டந்தோறும், தாலுகா தோறும் நடத்தப்படும் என்றார்.