ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரெவல்லாம் காங்கிரஸுக்கு தேவைதானா?: ப.சிதம்பரம் போர்க்கொடி
டெல்லி: ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவு அளித்தது என்பது காங்கிரஸுக்கு தேவையில்லாத ஒன்று என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 32 இடங்களைப் பெற்ற பாஜக ஆட்சி அமைக்க முன்வரவில்லை. ஆனால் 28 இடங்களுடன் 2வது இடம் பிடித்த ஆம் ஆத்மி 8 எம்.எல்.ஏக்களை கொண்ட காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது.

ஆம் ஆத்மி அரசை ஆதரிப்பதா?
தற்போது ஆம் ஆத்மி அரசை ஆதரிக்கும் காங்கிரஸ் முடிவை மூத்த அமைச்சர்களில் ஒருவரான நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு அவர் அளித்த பேட்டியில், ஆம் ஆத்மிக்கான ஆதரவு தேவையில்லான ஒன்று என கருதுகிறேன்.

அமைதியாக இருந்திருக்கலாமே..
8 எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் பெற்றுள்ளது. சட்டசபையில் ஆம் ஆத்மி அரசு வாக்கெடுப்பு நடத்திய போது ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிக்காமல் அமைதியாக இருந்துவிட்டு போயிருக்கலாம்.

கருத்து வேறுபாடு உண்டு
ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸில் கருத்து வேறுபாடுகள் உண்டு.

காலம்தான் தீர்மானிக்கும்
இருப்பினும் ஆம் ஆத்மி அரசுக்கான ஆதரவு சரியா? தவறா என்பதை காலம்தான் தீர்மானிக்கும் என்றார்.

நடவடிக்கை எடுங்களேன்..
2010ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்து வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, நூற்றுக்கணக்கானோர் மீது நூற்றுக்கணக்கான புகார்களை கேஜ்ரிவால் கூறிவருகிறார். ஊழல் குற்றச்சாட்டுகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மவுன தலைவர்கள்..
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்திருக்கும் ப.சிதம்பரம், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஊடகங்களிடம் பேச தயங்குகிறவர்களாக இருக்கின்றனர். மேலிட தலைவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமா வாரத்துக்கு 2 அல்லது 3 முறை தொலைக்காட்சிகளில் பேசுகிறார். வாரம் ஒரு முறை இங்கிலாந்து பிரதமர் கேமரூடன் ஊடகங்களிடம் பேசுகிறார்.
காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் ஊடகங்களிடம் அதிகமாக பேச வேண்டும் என்பதுதான் யதார்த்தம் என்றார்.












Click it and Unblock the Notifications