ஹரியானாவில் 2005 சூழல் மீண்டும் திரும்பும்! நாங்கள் ஆட்சியை பிடிப்போம்.. காங்கிரஸ் நம்பிக்கை
சண்டிகர்: ஹரியானாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த 2005ம் ஆண்டை போல தற்போதும் காங்கிரஸ் நிச்சம் வெற்றி பெறும் என அக்கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இந்தி மொழி, கலாச்சார காவலர்கள், மாட்டிறைச்சி என பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றதுதான் ஹரியானா. சமீபத்தில் சண்டிகர் மேயர் தேர்தல் மற்றும் மாட்டிறைச்சி கடத்தல் விவகாரங்களில் ஹரியானாவின் பெயர் பலமாக அடிபட்டிருந்தது. இப்படி இருக்கையில் விரைவில் இந்த மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

இம்மாநிலத்தில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளை அனைத்திற்கும், அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகின்றன. பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதேபோல காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியாக இணைந்து களம் காண்கின்றன.
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு இங்கு பலத்த அடி விழுந்தது. மறுபுறம் கடந்த 10 ஆண்டுகளாக ஹரியானாவில் பாஜக ஆளும் கட்சியாக இருப்பதால், மக்கள் மத்தியில் இயல்பாகவே அதிருப்தி இருக்கிறது. இதையெல்லாம் மீறி கட்சி எப்படி வெற்றிப்பெறபோகிறது? என்று கேள்வி எழுந்திருக்கும் நிலையில், வெற்றியை உறுதி செய்ய பிரதமர் மோடியை கட்சி களமிறக்கியிருக்கிறது.
மறுபுறம் பாஜக மீதான அதிருப்தியை தனது வெற்றியாக மாற்றிக்கொள்ள காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது. இது குறத்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, "காங்கிரஸ் கட்சி கடந்த 2005ம் ஆண்டு பெற்ற வெற்றியை போன்று தற்போதும் வெற்றி பெறும். மொத்தமுள்ள 90 இடங்களில் கட்சி 86 இடங்களில் போட்டியிடுகிறது. கடந்த 2005ம் ஆண்டு கட்சி 67 இடங்களில் ஜெயித்திருந்தது. அந்த வெற்றியை விட தற்போது வெற்றி தீவிரமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
பாஜகவுக்கு எதிரான அதிருப்தி ஒருபுறம் இருந்தாலும் அதை தங்களுக்கான வாக்காக காங்கிரஸ் வெற்றிகரமாக மாற்ற வேண்டும். கடந்த 2019ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையை பெறவில்லை, அப்போது ஜனநாயக ஜனதா கட்சிதான் (ஜேஜேபி), பாஜகவுக்கு 10 எம்எல்ஏக்களுடன் ஆதரவளித்து ஆட்சியில் அமர வைத்தது. அதன் பின்னர் தனது ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டது என்பது தனிக்கதை.
ஆனால் இப்போதும் ஜனநாயக ஜனதா கட்சிக்கு ஹரியானாவில் வாக்கு வங்கி இருக்கிறது. மறுபுறம் ஆசாத் சமாஜ் கட்சியும் ஜேஜேபியுடன் கைகோர்த்திருக்கிறது. இந்த கூட்டணி ஜாட் மற்றும் தலித் வாக்கு வங்கியை ஒருங்கிணைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஹரியானா மக்கள் தொகையில் ஜாட் இனத்தவர்கள் 26% இருக்கிறார்கள். இது காங்கிரஸுக்கு சற்று சவால் கொடுக்கும். இருப்பினும் இதை சமாளித்து பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications