காங்கிரஸா-பாஜக? ‛நூலிழை’ தான் வித்தியாசம்.. ராஜஸ்தானில் ஆட்சியை பிடிப்பது யார்? பரபர கருத்து கணிப்பு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே கடும் மோதல் உள்ளது. இந்நிலையில் தான் வரும் சட்டசபை தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இத்தகைய சூழலில் தான் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பதில் காங்கிரஸ், பாஜக இடையே நூலிழை வித்தியாசம் தான் உள்ளது எனும் வகையில் பரபரப்பான கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது.
200 தொகுதிகள் ராஜஸ்தான் மாநிலத்துக்கு கடந்த 2018 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். மாநில காங்கிரஸ் தலைவராக சச்சின் பைலட் இருக்கிறார்.

ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்எல்ஏக்கள் உள்ளன. மாறாக பாஜகவுக்கு 70 எம்எல்ஏக்களும், சுயேச்சைகளாக 13 எம்எல்ஏக்களும், ஆர்எல்பி கட்சியை சேர்ந்த 3 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சிக்கு தலா 2 பேரும், ஆர்எல்டி கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளன. இதில் சுயேச்சைகள் சிலர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர்.
இதற்கிடையே ராஜஸ்தானில் கடும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. முதல்வர் பதவி விஷயத்தில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருப்பினும் காங்கிரஸ் மேலிடம் சமாளித்த பிரச்சனைக்கு தீர்வு கண்டது. இருப்பினும் இரு தலைவர்கள் இடையே முரண்பாடு உள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் குறித்து ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' சார்பில் பரபரப்பான கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது இன்று தேர்தல் நடந்தால் மக்கள் யார் பக்கம்? என்ற அடிப்படையில் இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 23 ஆயிரம் பேரிடம் இருந்து கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதில் மக்கள் கூறிய கருத்துகளின் அடிப்படையில் மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பாஜக 2வது இடத்தை பிடிப்பதோடு, மயிரிழையில் அரியனை ஏறுவதை மிஸ் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தான் ராஜஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ள சாராம்சம் வருமாறு: ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மொத்தம் 23 ஆயிரம் பேரிடம் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இன்றைய தேதியில் தேர்தல் நடந்தால் யாருக்கு ஆதரவு என மக்களிடம் கேட்கப்பட்டது. மக்கள் கூறிய தகவலின் அடிப்படையிலான கருத்து கணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி காங்கிரஸ் கட்சி 102 முதல் 108 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என கூறப்பட்டுள்ளது. ராஜஸ்தானை பொறுத்தமட்டில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 101 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். இத்தகைய சூழலில் தான் காங்கிரஸ் காட்சி மெஜாரிட்டியை தொடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக பாஜக 78 முதல் 84 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 தேர்தலில் பாஜகவில் 70 பேர் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை கூடுதல் வெற்றியை பாஜக பெறலாம் எனவும், இருப்பினும் பாஜகவால் அங்கு ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கான வெற்றியை பதிவு செய்ய முடியாது என இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதோடு காங்கிரஸ், பாஜக தவிர மற்றவர்கள் 6 முதல் 8 தொகுதிகளில் வாகை சூடலாம் எனவும் ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு முடிவால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ள நிலையில் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது.
இந்த ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' இதற்கு முன்பும் பல்வேறு தேர்தல் கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக, டெல்லி மநாகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி, இமாச்சல பிரதேசம், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என தெரிவித்து இருந்தது. இவை அனைத்தும் பலித்து போனது. இத்தகைய சூழலில் தான் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை ஸ்மால் பாக்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications