எடியூரப்பா மகன் பேரம் பேசியதாக காங். வெளியிட்ட ஆடியோ போலி.. காங். எம்எல்ஏ பரபரப்பு தகவல்
Recommended Video

பெங்களூர்: காங். எம்எல்ஏக்களிடம் பாஜக தலைவர்கள் பேரம் பேசியதாக வெளியான ஆடியோ போலியா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது, அக்கட்சி எம்எல்ஏ ஒருவர் தனது பேஸ்புக்கில் கூறியுள்ள தகவல்.
கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருந்தார் எடியூரப்பா. முன்னதாக காங்கிரஸ் சார்பில் பல்வேறு ஆடியோ டேப்கள் வெளியிடப்பட்டன. அதில், பாஜக தலைவர்கள் எடியூரப்பா, ஸ்ரீராமலு, முரளிதரராவ், எடியூரப்பா மகன் விஜயேந்திரா உள்ளிட்ட பலரும் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பணம் தருவதாக பேச்சுவார்த்தை நடத்தியதை போன்ற ஆடியோக்கள் இருந்தன.

அதில் குறிப்பாக, எடியூரப்பா மகன் விஜயேந்திரா, எல்லாப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சிவராம் ஹெப்பார், மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பணம், பதவி தருவதாக ஆசைகாட்டி பாஜகவுக்கு வாக்களிக்க கோரிக்கைவிடுத்ததாக கூறப்பட்டது. காங்கிரஸ் மேலவை உறுப்பினர் உக்ரப்பா இந்த ஆடியோவை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த உரையாடல் போலியானது என்று சிவராம் ஹெப்பார், தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ஆடியோவில் பேசுவது தனது மனைவி குரல் இல்லை என அவர் கூறியுள்ளார். இது கர்நாடக காங்கிரஸ் கட்சி மீது விமர்சன கணைகள் தொடுக்க காரணமாக அமைந்துள்ளது.
இருப்பினும், இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு இல்லை என அக்கட்சி மூத்த தலைவர் ஹரிபிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications