நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவுச் செயலர் கே.சி. மிட்டல் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள மனுவில், சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கர் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில், ரத்தக் கறை படிந்த கைகளுக்கு ஆட்சிப் பொறுப்பு செல்வதைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று மோடி பலமுறை குறிப்பிட்டார்.
இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய கை சின்னத்தை அவமானப்படுத்தியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் விஷமத்தனமான பிரசாரத்தை பரப்பி வருகிறார்.
அரசியல் கட்சிகள் மீது தவறான வார்த்தைகளை அவர் பிரயோகம் செய்து வருகிறார். கட்சிகளின் கொள்கைகள், முந்தைய பணிகள் ஆகியவற்றை தேர்தல் பிரசாரத்தில் விமர்சிக்கலாம்.
ஆனால் நரேந்திர மோடியின் பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக உள்ளன. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. அதன் மீது ராகுல் காந்தி அண்மையில் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.