காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு- மதச்சார்பின்மை, பொருளாதார மேம்பாட்டுக்கு உறுதி!!
டெல்லி: லோக்சபா தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று வெளியிட்டார்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுப் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் அறிக்கை தயாரிப்பில் ராகுல் காந்தி முக்கிய பங்காற்றினார்.
நாடு கடந்த 10 ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. நலத்திட்டங்களை செயல்படுத்தும் அதே நேரத்தில் அரசியல் சாசன அமைப்பையும் பாதுகாக்க வேண்டும்.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்துவோம். நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வோம் என்றார்.
மன்மோகன்சிங், ராகுல்
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம். குஜராத் மாதிரி என்ற ஒன்றை மட்டுமே முன்வைக்கின்றனர். ஆனால் நாங்கள் அனைத்து பிரிவு மக்களும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும் என்கிறோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொருளாதர வளர்ச்சி 6.8% தான். ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி 8.4%ஆக இருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2வது ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி 7.3% எட்டியிருந்தது.
அதேபோல் ஏழ்மையில் இருந்த 14 கோடி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளோம் என்றார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், 2009ஆம் ஆண்டு அளித்த வாக்குறுதிகளீல் 90% நிறைவேற்றப்பட்டுவிட்டது. மக்களின் கருத்து அறிந்து இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். மக்களின் குரலை வெளிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஏழைகளையோ தொழில்துறையினரையோ புறக்கணித்துவிட்டு நாடு வளர்ச்சி அடையாது என்றார்.