ராஜீவ் கொலை வழக்கு: 7 பேரை விடுதலை செய்ய யாருக்கு அதிகாரம்? காங்கிரசின் வியூகம் என்ன?
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள தமிழர்கள் 7 பேரை விடுதலை செய்ய முடியுமா, முடியாதா என்று முடிவெடுக்கும் அதிகாரம் முழுக்க, முழுக்க மத்திய அரசிடம்தான் உள்ளது. இதில் மத்திய அரசு எடுக்கும் முடிவை எதிர்நோக்கி தமிழக மக்கள் ஆர்வமோடு காத்திருக்கிறார்கள்.
ராஜீவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தை காரணம் காட்டி அவர்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.
இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி ஏற்கனவே இவ்வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுவிப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

ஒரு சில வழக்குகள்
மாநில அரசுக்கு இவ்வாறான உரிமை உள்ளபோதிலும், ஒரு சிலவகை வழக்குகளில் அவ்வாறு மாநில அரசுகள் தன்னிச்சையாக செயல்பட முடியாது. எனவே, தமிழக அரசு உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

நீதிமன்றம் தீர்ப்பு
கடந்த டிசம்பரில் வழக்கு விசாரணை முடிவடைந்தது. இந்த வழக்கில் தண்டனைக்குள்ளானவர்களை விடுதலை செய்வது குறித்த அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. மத்திய அரசுக்குத்தான் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

தடா, சிபிஐ வழக்குகள்
தடா, பொடா போன்ற சட்டங்களின்கீழ் தண்டனை பெற்றவர்களையும், சிபிஐ போன்ற மத்திய விசாரணை அமைப்பு விசாரணை நடத்தும் வழக்கில் தண்டனை பெற்றவர்களையும், தண்டனைக்காலத்தை கணிசமாக அனுபவித்த பிறகு கருணை அடிப்படையில், விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாக சுப்ரீம்கோர்ட் தனது தீர்ப்பில் கூறியது.

தமிழக அரசு கடிதம்
இந்நிலையில், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பது குறித்து கருத்துக் கேட்டு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், மத்திய உள்துறை செயலாளருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். இந்த விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள 2வது ஸ்டெப் இதுவாகும்.

மத்திய அரசின் களத்தில் பந்து
இப்போது மத்திய அரசு களத்தில்தான் பந்து இருக்கிறது. அந்த பந்தை மத்திய அரசு, எந்த பக்கம் தூக்கிப்போடப்போகிறது என்பதை தமிழக மக்கள் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டுள்ளனர். அதேநேரம், மத்திய அரசு, 7 பேர் விடுதலைக்கு பச்சைக்கொடி காட்டிவிடக்கூடாது என்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி நெருக்கடியை அதிகரித்து வருகிறது.

நெருக்கடி தருகிறது காங்கிரஸ்
சோனியா காந்தி தலைமையில், காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகள் டெல்லியில், இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து வருகிறார்கள். தேசிய அளவில் ஒருமித்த கருத்தை உருவாக்கி, 7 பேர் விடுதலையை தடுப்பது காங்கிரஸ் மூவ்-வாக இருக்கும் என்கிறார்கள். முன்னாள் பிரதமரை கொலை செய்தவர்களை விடுதலை செய்யும் பாஜக தேசப்பற்று உள்ள கட்சியா என்ற கேள்வியோடு, சமூக வலைத்தளங்களில் பாஜகவுக்கு நெருக்கடியை அதிகரிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications