ஊழலைக் காட்டி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் கூடாது: ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் எச்சரிக்கை
டெல்லி: ஆட்சியில் அமர்ந்ததும் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஆம் ஆத்மி ஈடுபட்டால் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என அரவிந்த் கெஜ்ரிவாலை காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைக்க இருக்கிறது.

ஆனால் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த விவகாரத்தில் காங்கிரசில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. காங்கிரஸ் மேலிடத்தின் முடிவை கண்டித்து அக்கட்சி தொண்டர்கள் டெல்லியில் உள்ள மாநில காங்கிரஸ் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
அதற்குத் தகுந்தாற்போல், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லியின் வருங்கால முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தான் ஆட்சியில் அமர்ந்ததும் காங்கிரஸ், பாஜக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப் படும் எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ஆம் ஆத்மிக்கு அளிக்கும் ஆதரவு நிபந்தனையற்றது அல்ல என காங்கிரஸ் அறிவித்தது. இந்நிலையில், டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க எங்கள் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் ஷகீல் அகமது, டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜே.பி.அகர்வால் ஆகியோர் கடந்த 13-ந்தேதி மாநில கவர்னர் நஜீப் ஜங்குக்கு கடிதம் எழுதி உள்ளனர். ஆம் ஆத்மி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் காங்கிரஸ் கட்சியின் நிலையில் மாற்றம் இல்லை.
ஊழலை ஒழிக்க போராடுவது முதல்வர் உள்பட அனைவரின் கடமையும் ஆகும். பதவி ஏற்கும் போதும் ஊழலை ஒழிக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். எனவே ஊழலை ஒழிப்போம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதேசமயம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் நடவடிக்கை மேற்கொண்டால் நாங்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டோம். உடனடியாக எங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நிபந்தனைகளுடன்தான் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாகவும், ஆதரவு எந்த நேரத்திலும் வாபஸ் பெறப்படலாம் என்றும் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சந்தீப் தீட்சித் அளித்த பதிலாவது,‘தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை அவர்கள் எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதை முதலில் பார்ப்போம். எதிர்க்கட்சி வரிசையில் அமரும் காங்கிரஸ் தனது கடமையை சிறப்பாக செய்யும். மேலும், ஆம் ஆத்மிக்கு 2 அல்லது 3 மாதங்கள் கால அவகாசம் கொடுப்போம். அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்று பார்ப்போம்' என்றார்.












Click it and Unblock the Notifications