தலைமை நீதிபதிக்கு எதிரான இம்பீச்மென்ட் நோட்டீஸ் நிராகரிப்பு.. சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை
டெல்லி: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸை ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்ததை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்கை நாளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கவுள்ளது.
இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் உள்ள 5 நீதிபதிகளான சலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் விசாரிக்கவில்லை. மாறாக 6வது இடத்தில் உள்ள நீதிபதி சிக்ரி, அவருக்கு அடுத்த நிலைகளில் உள்ள எஸ்.ஏ. பாப்டே, என்வி ரமணா, அருண் மிஸ்ரா, ஏ.கே.கோயல் ஆகியோர்தான் விசாரிக்கவுள்ளனர்.
சீனியர் நீதிபதிகளைத் தவிர்த்து விட்டு ஜூனியர் நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி சலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், லோகுல், குரியன் ஜோசப் ஆகியோர், தலைமை நீதிபதிக்கு எதிராக பரபரப்பு புகார்களை அடுக்கி குற்றம் சாட்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக ராஜ்யசபாவில் இம்பீச்மென்ட் (தகுதி நீக்க) நோட்டீஸை தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அதை ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்து விட்டார். இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பிக்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குதான் நாளை விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கோரி சலமேஸ்வர் தலைமையிலான பெஞ்ச் முன்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை வைத்தார். முதலில் இதுகுறித்து தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் நாளை வருமாறு கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் நாளை இந்த வழக்கை நீதிபதி சிக்ரி தலைமையிலான பெஞ்ச் விசாரிக்கவுள்ளது.