"பயந்துடீங்களா மம்தா?"... எங்க போனாலும் உங்களுக்கு தோல்வி நிச்சயம்... தீதியை சீண்டும் மோடி
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, தோல்வி பயம் வந்துவிட்டதாகவும் மாநிலத்தில் எங்குச் சென்றாலும் மம்தாவுக்கு தோல்விதான் கிடைக்கும் என்றும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மற்றும் அசாம் மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. மாலை 5.10 மணி வரை, அசாமில் 67.60% மற்றும் மே. வங்கத்தில் 72.25% வாக்குகள் பதிவாகியுள்ளது.
நந்திகிராம் தொகுதியில் பொதுமக்களை வாக்களிக்க விடாமல் பாஜகவினர் தடுப்பதாக மம்தா பானர்ஜி புகார் அளித்துள்ளார். அதேபோல பதிலுக்கு பாஜகவும் திரிணாமுல் கட்சியினர் பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தோல்வி பயம்
இந்நிலையில், மேற்கு வங்கத்தின் ஜாய்நகர் பகுதியில் பிரசாரத்தை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மம்தாவை மிகக் கடுமையாகச் சாடினார். மம்தாவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும் நந்திகிராம் பகுதி மக்கள் மம்தாவை புறக்கணித்துவிட்டதாகவும் சாடினார். இதை உணர்ந்த மம்தா, வேறு வழியின்றி சுமார் 3 நாட்கள் மற்ற தொகுதிகளை விட்டுவிட்டு நந்திகாரம் தொகுதியில் பிரசாரம் செய்ததாகவும் தெரிவித்தார்.

எங்குச் சென்றாலும் தோல்விதான்
தொடர்ந்து ம்மதாவை கடுமையாகச் சாடிய அவர், "தோல்வி பயத்தில் இருக்கும் மம்தா வேறொரு தொகுதியில் வேட்பு மனு செய்வரா? ஏற்கனவே நந்திகிராம் தொகுதியில் மக்கள் உங்களுக்குப் பதில் அளித்துவிட்டனர். மேற்கு வங்கத்தில் நீங்கள் எங்குச் சென்றாலும் பொதுமக்கள் உங்களுக்கு இதே பதிலைத்தான் அளிப்பார்கள். மக்கள் முடிவு எடுத்துவிட்டார்கள். எங்குச் சென்றாலும் உங்களுக்கு இதே முடிவுதான்" என்றும் அவர் அட்டாக் மோடில் பேசினார்.

வங்கதேசத்தில் மோடி
பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன் வங்கதேசம் சென்றிருந்தார். அங்குக் காளி கோயிலுக்குச் சென்ற அவர். மாதுவா இன மக்களிடம் உரையாற்றினார். மாதுவா இன மக்களின் வாக்குகள் மேற்கு வங்கத்திலும் கணிசமாக உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்திருந்தது.

மம்தாவுக்கு பிடிக்கவில்லை
இது குறித்துப் பேசிய பிரமதர் மோடி, "காளி கோயிலுக்கு நான் செல்வது மம்தாவுக்கு பிடிக்கவில்லை. தேர்தல் காலத்தில் மட்டும் நாங்கள் எங்களின் மத நம்பிக்கையைப் பின்பற்றுவதில்லை. எப்போதும் எங்களது நம்பிக்கையும் பாரம்பரியத்தையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம். மாதுவா இன மக்களின் தலைவனான ஹரிசந்த் தாகூருக்குக் கட்டப்பட்டுள்ள கோயிலுக்குச் சென்று வழிபட்டேன். ஆனால் அதுவும் ஏனோ ம்மதாவுக்கு பிடிக்கவில்லை" என்று அவர் பேசினார்

கடிதம் ஏன்
மேற்கு வங்கத்தில் வரும் மாற்றுக் கட்சியினரை அந்நியர்கள் என்று முத்திரை குத்தும் மம்தா, இப்போது அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்குக் கடிதம் எழுதியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். மம்தா பானர்ஜிக்கு ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கினால் பிடிக்காது என்றும் அவருக்குக் காவி உடை என்றால் அலர்ஜி என்றும் அவர் தெரிவித்தார். திரிணாமுல் கட்சியினர் பாஜக தொண்டர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

திரிணாமுல் பதிலடி
ஆனால், இதை திரிணாமுல் காங்கிரஸ் முற்றிலுமாக மறுத்துள்ளது. மாநிலத்தில் வேறு எந்த தொகுதியிலும் போட்டியிடுவது குறித்து முதல்வர் மம்தா சிந்திக்கக் கூட இல்லை என்று திரிணாமுல் சார்பில் கூறப்பட்டுள்ளது. நந்திகிராம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா வெல்லப்போவது உறுதி என்றும் இதனால் வேறு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்த பேச்சுக்கே இடமில்லை என்றும் திரிணாமுல் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications