மாஸ்க்குகள் இல்லை.. வெப்பநிலை சோதனை இல்லை.. மகா கும்பமேளாவில் இதுவரை 102 பேருக்கு கொரோனா
டேராடூன்: மகா கும்பமேளாவில் கொரோனா விதிமுறைகள் முறையாகப் பின்பற்றுவதில்லை என்ற புகார் எழுந்துள்ள நிலையில், அங்கு இதுவரை 102 பக்தர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மகா கும்பமேளா தொடங்கி 12 நாட்கள் கடந்துள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வருகிறது.
கங்கை நதிக்கரையில் நாளை புனித நீராட இதுவரை சுமார் 28 லட்சம் பக்தர்கள் ஹரித்துவாருக்கு வந்துள்ளனர். மகா கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்ள வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா விதிகள்
மகா கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் கட்டாயம் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், களத்தில் நிலைமை முற்றிலும் நேர் மாறாக உள்ளது. பக்தர்கள் யாரும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதில்லை. மேலும், மாஸ்க்குகளையும் பெரும்பாலான பக்தர்கள் அணிவதில்லை. மாஸ்க்குகளை அணியாதவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சான்றிதழ் இல்லாதவர்களுக்கும் அனுமதி
கும்பமேளா நடைபெறும் இடத்தில் பக்தர்களின் வெப்பநிலையைப் பரிசோதனை செய்ய எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை. இதுதவிர கொரோனா நெகடிவ் சான்றிதழ்களை சமர்ப்பிக்காத பக்தர்களும் கும்பமேளாவில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. உத்தரகண்ட் மாநில எல்லையில் மட்டுமே கொரோனா நெகடிவ் சான்றிதழ் கேட்கப்படுவதாகவும் ஹரித்துவாரில் கொரோனா சான்றிதழ் கேட்கப்படுவதில்லை என்றும் சிலர் தெரிவித்தனர்.
வெப்பநிலை சோதனை
இது குறித்து கும்பமேளா கொரோனா பொறுப்பு அதிகாரி அவினாஷ் கன்னா கூறுகையில், மாநில எல்லைகள், ரயில் நிலையங்களில் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. இதனாலேயே கும்பமேளா நடைபெறும் இடங்களில் கொரோனா சோதனைகள், வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படவில்லை. ஆனால், விரைவில் இங்கும் பரிசோதனைகளைச் செய்ய நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தார். மேலும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றதா நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Recommended Video
இதுவரை 104 பேருக்கு கொரோனா
அதேநேரம் கங்கையில் புனித நீராட வந்திருக்கும் நபர்களிடம் ரேபிட் ஆன்டிஜன் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகச் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திங்கள்கிழமை காலை 11.30 முதல் மாலை 5 மணி வரை 18.179 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 102 பேருக்கு கொரோனோ இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.