இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்.. 4 நாளில் இரண்டு மடங்கு அதிகரிப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த நான்கு நாட்களில் இருமடங்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியா தற்போது மோசமான சுகாதார அவசர நிலையை எதிர்கொள்கிறது. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது, ஒவ்வொரு நாளும் எராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தியா இன்னும் "சமுதாய பரவல்" கட்டத்தை அடையவில்லை என்று மத்திய அரசு சொல்லிக்கொண்டாலும் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தே வருகிறது.

நாட்டையே பூட்டிவிட்டார்கள்
இதனால் சுகாதார அவசர நிலைக்கட்டத்தை இந்தியா அடைந்துள்ளது. இதன் காரணமாகவே 21 நாட்கள் இந்தியாவையே லாக்டவுன் (பூட்டிவிட்டார்கள்) செய்து வைத்துள்ளார்கள். ஊரடங்கு, 144 என்று எந்த பெயரில் அழைத்தாலும் இந்தியா இப்போது ஒவ்வொரு ஊர் வாரியாக பூட்டப்பட்டுள்ளது என்பதே உண்மை. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்படுகின்றன.

கொரோனா பாதிப்பு
கொரோனாவின் தாக்குதல் என்பது மார்ச் 10 முதல் 20 வரையிலான 10 நாட்களில் 50 ல் இருந்து 196 ஆக உயர்ந்தது. மார்ச் 25 க்குள், அது 606 ஆக உயர்ந்தது. அதன்பிறகு மாத இறுதியில் (மார்ச் 31) இந்தியாவில் 1,397 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, அடுத்த ஐந்து நாட்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 120 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் இந்தியாவில் மொத்தம் 3,072 ஆக உயர்ந்தது.

4420 ஆக உயர்வு
இந்நிலையில் அடுத்த இரு நாட்களில் இந்த எண்ணிக்கை 4420 ஆக எட்டியுள்ளது. இதுவரை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட கணக்கு படி 3981 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 325 பேர் குணமடைந்துள்ளனர். 114 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 748 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு 621 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் 523 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.

பொருளாதாரம் அழிந்தது
நாட்டில் 30 மாநிலங்களில் (யூனியன் பிரதேசம் உள்பட) கொரோனா வைரஸ் பரவி உள்ளதால் சுகாதார அவசர நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சுகாதார அவசரநிலை நாட்டின் சுகாதார அமைப்பில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி உள்ள தாக்கமும் பாதிப்பும் மிகப்பெரிய அளவில் நாட்டின் நிலைமையை புரட்டி போட்டுள்ளது. இதில் இருந்து மீண்டுவருவதற்கு நாம் உடனடியாக சமூக விலகலை கடைபிடிப்பதை தவிர வேறு வழியில்லை. மற்றபடி காலத்திற்கே இதை மாற்றும் சக்தி உள்ளது. நாம் கடினமான கட்டத்தில் இருக்கிறோம். கடந்து போக வேண்டியது கட்டாயமும் கூட.. !












Click it and Unblock the Notifications