இதுதான் கமல்நாத் மாடல்.. பாவம் பண்ணிட்டாருய்யா, பாவம் பண்ணிட்டாரு.. மபியை அதிரவைத்த பாஜக முதல்வர்
போபால் : மத்திய பிரதேச முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் ஆட்சியின் மாடல் என்பது ஊழல், குற்றம், கமிஷன் Corruption, Crime, Commission) ஆகியவை தான் என்று, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தேர்தல் பிரச்சாரத்தின் போது குற்றம்சாட்டினார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற போகிறது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது.

அங்கு தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளிடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் வகுத்த பிரச்சார வியூகம் வெற்றி பெற்றதால், மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் அதே பாணியில் பிரச்சாரம் செய்து வருகிறது.
மத்திய பிரதேசத்தில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வியூகங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவும் பல்வேறு நவீன யுக்தியை பிரச்சாரத்தில் மேற்கொண்டு வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பிரச்சாரங்களுக்கு உடனுக்குடன் பாஜக பதிலடி கொடுத்து வருகிறது. திகம்கர் மாவட்டத்தில் உள்ள பிரித்விபூர் சட்டமன்ற தொகுதியில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கமல்நாத் மாடல் ஆட்சி வரும் என்று கமல்நாத் கூறி வருகிறார். இது என்ன கமல்நாத் மாடல் என்றால்? ஊழல், குற்றம் மற்றும் கமிஷன் ஆகியவை தான் அந்த மாடல் ( கரெப்சன், குற்றம், கமிஷன் ).
எனது அரசு 'லாட்லி பெஹ்னா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கி வருகிறது. ஆனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அந்த திட்டம் இல்லாமல் போகும் என்றார்.
இதனிடையே காங்கிரஸ், அதன் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதாந்திர உதவியாக ரூ.1,500 வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்த சூழலில் லாட்லி பெஹ்னா யோஜனா திட்டத்தின் கீழ் படிப்படியாக மாதத்திற்கு ரூ.3000 ஆக உயர்த்தப்படும் என்று சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் சேரும் ஏழை மாணவர்களின் கட்டணத்தை தனது அரசே செலுத்தும் என்று கூறிய சௌகான், ஒவ்வொரு குடும்பத்துக்கும் வேலை வழங்குவதாகவும், எல்பிஜி சிலிண்டர்களுக்கான மானியம் தலா ₹ 450க்கு வழங்குவதாகவும், உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தைத் தள்ளுபடி செய்வதாகவும் உறுதி அளித்தார். மேலும் காங்கிரஸால் ஒருபோதும் மக்களுக்கு இதுபோன்ற நன்மைகளை வழங்க முடியாது என்றும் சௌகான் கூறினார்.
கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, டிசம்பர் 2018 முதல் மார்ச் 2020 வரையிலான ஆட்சிக் காலத்தில், பைகா, பரியா மற்றும் சஹாரியா பழங்குடியினருக்கு ரூ.1,000 மாதாந்திர உதவி வழங்கும் நலத் திட்டங்களை நிறுத்தியதன் மூலம் கமல்நாத் பாவம் செய்துள்ளார் என்றும் சிவராஜ் சிங் சௌகான் கூறினார்.












Click it and Unblock the Notifications