'மேட் பார் ஈச் அதர்' கமெண்ட் போடாத பேஸ்புக் நண்பர்கள்... மனமுடைந்த தம்பதி விவாகரத்துக்கு மனு
மும்பை: பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த தங்களது போட்டோவிற்கு நண்பர்கள் யாரும், ‘நீங்கள் பொருத்தமான ஜோடி' என கமெண்ட் போடாததால் மனமுடைந்த தம்பதி விவாகரத்திற்கு விண்ணப்பித்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு மும்பையில் உள்ள கேப்ஸ் கார்னர் பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒன்று, சமீபத்தில் தாங்கள் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவரது நண்பர்கள் யாரும், நீங்கள் இருவரும் பொருத்தமான ஜோடி என பாராட்டவில்லையாம்.

இதனால் மனமுடைந்து போன அத்தம்பதி, அப்போது உண்மையிலேயே நாம் சரியான ஜோடியில்லை என்ற முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர்.
விவாகரத்திற்கான ஆவணங்களைக் கையெழுத்திடும் போது அவர்கள், "ஒருவர் கூட எங்கள் புகைப்படத்தை மேட் ஃபார் ஈச் அதர் என்று கூறாதது, எங்களின் உறவு நிலையை தெளிவுபடுத்தியுள்ளது. இனியும் நாங்கள் சேர்ந்து வாழ்வதில் பலனில்லை" என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அக்கணவர் கூறுகையில், "பல நண்பர்களும் எங்களது ஜோடி புகைப்படத்தை லைக் செய்துள்ளனர். ஆனால், எந்த முட்டாளும் நாங்கள் எதிர்பார்த்த 'மேட் ஃபார் ஈச் அதர்' கமெண்ட் இடவில்லை" என்றார்.
திருமண நாள் முதற்கொண்டே இவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது. ஆனால், அவ்வப்போது தங்களது புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்து, அதற்கு வரும் ‘லவ்லி பேர், மேட் பார் ஈத் அதர்' என்ற நண்பர்களின் கமெண்டுகள் மூலம் அவர்கள் நாம் சரியான ஜோடி தான் என சமாதானமாகி சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த சூழலில் தான் சமீபத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படத்திற்கு நண்பர்கள் யாரும் மேற்கூரியபடி ஏதும் கமெண்ட் கூறாமல் இருந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அந்தத் தம்பதி பிரிய முடிவெடுத்து விட்டனர்.
மனப் பொருத்தம் உட்பட எத்தனையோ பொருத்தங்கள் பார்த்து திருமண வாழ்வில் இணைந்த தம்பதியை, பேஸ்புக் கமெண்ட் விவாகரத்து வரை கொண்டு சென்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து குடும்ப நல நிபுணர் ஒருவர் கூறுகையில், "பேஸ்புக்கில் தம்பதியர் மற்றும் காதலர்கள் தங்களின் ஜோடி புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் போது, அவர்களின் நண்பர்களின் சார்பாக 'மேட் ஃபார் ஈச் அதர்' என்ற ஆட்டோ-கமெண்ட் வசதியை ஏற்படுத்த மார்க் ஜூக்கர்பர்க் முன்வர வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications