அன்புமணி ராமதாஸ் மீதான சிபிஐ வழக்கு: டிசம்பர் 2-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அனுமதி வழங்கியதாக, மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 2-ந் தேதிக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் தனியார் மருத்துவக் கல்லூரியில், 2008-09 கல்வியாண்டில் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் தடை விதித்த போதும், விதிகளை மீறியும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும் அப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் அனுமதி அளித்ததாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இதில் அன்புமணி ராமதாஸ் அமைச்சராக இருந்த போது சுகாதாரத் துறையில் துணைச் செயலராக இருந்த கே.வி.எஸ். ராவ், சுகாதார அமைச்சகப் பிரிவு அலுவலர் சுதர்சன் குமார், சஃப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர்கள் ஜே.எஸ். தூபியா, திபேந்திர குமார், இந்தூர் இண்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவர் சிரேஷ் சிங் பதோரியா, கல்லூரியின் முன்னாள் டீன் எஸ்.கே. டோங்கியா, கல்லூரியின் இயக்குநர் கே.கே. சாக்ஸனா, நிதன் கோத்வால், டாக்டர் பவன் பம்பானி ஆகியோருக்கு எதிராக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் 2012 ஏப்ரல் 27-ந் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இது தொடர்பான வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி மது ஜெயின் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:
கடைசியாக நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இதுவரை ஆஜராகி வந்த சிபிஐ வழக்கறிஞர் மாற்றப்பட்டுள்ளார். எனவே, இந்த வழக்க்கின் விசாரணையை டிசம்பர் 2-ந் தேதிக்கு ஒத்திவைக்கிறேன். இவ்வாறு நீதிபதி கூறினார்.












Click it and Unblock the Notifications