காந்தியைக் கொன்ற கோட்சே படத்துக்கு எதிரான வழக்கு.. தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
புனே: காந்தியைக் கொன்ற மதவெறியன் கோட்சேயைப் பற்றி எடுக்கப்பட்டுள்ள படத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை புனே நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேஷ் பக்த் நாதுராம் கோட்சே (தேச பக்தர் நாதுராம் கோட்சே) என்ற பெயரில் கோட்சே பற்றி ஒரு படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்துக்கு எதிராக புனே சிவில் கோர்ட்டில் சமூக ஆர்வலர் ஹேமந்த் பாட்டீல் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், "விரைவில் வெளியாக உள்ள ‘தேஷ் பக்த் நாதுராம் கோட்சே' திரைப்படத்தில், மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தராகவும், காந்தியை இந்துக்களுக்கு எதிரானவராகவும் சித்தரித்து இருப்பதாக அகில பாரதீய இந்து மகாசபை பொதுச்செயலாளர் முன்னா குமார் கூறி இருக்கிறார்.
இந்த திரைப்படம் வெளியானால் மத நல்லிணக்கத்துக்கு தீங்கு ஏற்படும். எனவே, கோட்சே திரைப்படத்தால் மதவாத பிரச்சினைகள் ஏற்படாது என்று அதன் தயாரிப்பாளர் கோர்ட்டில் உறுதி அளிக்கும் வரை, அந்த படம் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும்," என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.எம்.பிங்கிள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டவர் இன்னும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கோட்சே திரைப்படமும் இன்னும் வெளியாகவும் இல்லை. எனவே, பிரதிவாதியின் வாக்குமூலத்தைக் கேட்டறியாமல், இதுபோன்ற மனுக்களை விசாரிக்க முடியாது,'' என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.